சஞ்சய்லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் ராணி பத்மாவதியாகவும், ஷாகித் கபூர் ராணா ரத்தன் சிங் வேடத்திலும், ரன்வீர் சிங் அலாவுதின் கில்ஜி வேடத்திலும் நடித்துள்ளனர். பெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து முடிவடையும் வரை கடுமையான போராட்டத்தைச் சந்தித்து வருகிறது.
தற்போது இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புட் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இத்திரைப்படத்துக்கு பாஜக, கர்னி சேனா போன்ற அமைப்புகளும் கண்டனங்களைத் தெரிவித்ததால் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகவிருந்த திரைப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில், பத்மாவதி திரைப்படம் குறித்து திரைப் பிரபலங்கள் பலர் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான குஷ்பு, 'பத்மாவதி' எதிர்ப்பு குறித்து கூறியது, 'இது ஜனநாயகத்தின் இருண்ட நாள். பத்மாவதி, படத்துக்கு எதிராகக் கிளம்பியுள்ள சர்ச்சைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிலைப்பாடு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது’ என்று பகிர்ந்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நமது அரசியலைப்பு உரிமையை பாதுகாப்பதாக உறுதி அளித்தவர்களுக்கு ஏற்பட்ட அவமானம் என்றும், ஒரு சில பரம்பரையினர் நமது ஜனநாயகத்தை கொலைச் செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.