நடிகர் அஜித்தை வைத்து விளம்பரம் தேடவேண்டிய அவசியம் தனக்கில்லை என்று இயக்குநர் சுசீந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில், சினிமா ஃபைனான்சியர் கடனைக் கேட்டு மிரட்டியதால், திரைப்பட இயக்குநர் சசிகுமாரின் மைத்துனர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
இயக்குநர் சுசீந்திரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இதற்குக் காரணமான மதுரை அன்பு தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார். இதற்குச் சிலர், மதுரை அன்பு பெயரை வெளிப்படையாகச் சொல்லமுடியவில்லையா என்று விமரிசனம் செய்தார்கள்.
இதையடுத்து ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியதாவது:
நான் கடவுள் சமயத்தில் இந்த அன்புச்செழியனால் அஜித் சாரும் அசோக் அண்ணன் மனநிலைக்கு ஆளானார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கள் லிங்குசாமி, கெளதம் மேனன், தயாரிப்பாளர்கள் முக்கால்வாசி பேரும் பல நடிகர்களும் இந்த அன்பு செழியனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இமான் இசையமைப்பாளரிடம், எந்தப் படத்துக்கு அவர் இசையமைக்கவேண்டும் என்று மறைமுகமாகச் சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் இந்த அவல நிலைக்குக் காரணமான அன்புச்செழியன் தண்டிக்கப்படவேண்டும். மத்திய அரசுக்கும் வருவாய்த்துறைக்கும் ஒரு வேண்டுகோள். தமிழ்நாட்டின் பாதி பணம் அன்புவிடம் இருக்கும். தயவு செய்து அவர் வீட்டிலும் ரெய்டு செய்யவும் என்று கூறியுள்ளார்.
ட்விட்டரில் சுசீந்திரனிடம் ஒரு ரசிகர், அப்போது எல்லாம் பேசாமல் இப்போது ஏன் பேசுகிறீர்கள்? அன்புச்செழியனிடம் எதுவும் கடன் வாங்கியிருக்கிறீர்களா? அஜித்தை வைத்து ஏன் விளம்பரம் தேடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சுசீந்திரன் அளித்த விளக்கம்:
அன்புச்செழியனிடம் இல்லை, எவரிடமும் 1 ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை. விளம்பரம் தேடவேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. அன்புச்செழியன் பற்றி எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதே என் நோக்கம் என்று கூறியுள்ளார்.