மலையாள இயக்குனர் சணல்குமார் சசிதரன் இயக்கிய படமான ‘செக்ஸி துர்கா’ கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இத்திரைப்படம் முதலில் இந்தியன் பனோராமா எனும் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த படமாகும். ஆனால் அந்தப் பட்டியல் செய்தி ஒளிபரப்பு துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது இரண்டு படங்களை அதிலிருந்து நீக்கிவிட்டது அக்குழு. அவை மலையாளப் படமான‘செக்ஸி துர்கா’ மற்றும் மராத்திய படமான ‘நியூட்’ ஆகியவை.
இத்திரைப்படங்களின் தலைப்புகளால் சர்ச்சைகள் எழுந்ததால், செக்ஸி துர்கா என்ற பெயரை Sxxx Durga என்று மாற்றினர் படக்குழுவினர். ஆனால் இதுபோன்ற படங்கள் திரைப்பட விழாக்களில் பங்குபெற தடை விதிப்பதே சரி என்பது ஒரு சாராரின் கருத்து.
இதை எதிர்த்து கேரளா உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார் இயக்குனர் சணல்குமார் சசிதரன். இதை விசாரித்த நீதிமன்றம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ‘செக்ஸி துர்கா’வை திரையிடுமாறு திரைப்படவிழா கமிட்டிக்கு உத்தரவிட்டுள்ளது. இத்திரைப்படம் இந்த ஆண்டுக்கான ஹிவாஸ் டைகர் எனும் விருதை ராட்டர்டாம் திரைப்பட விழாவில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.