ஓவியாவுடன் இணைந்து நடிக்கத் தயார்: 'பிக் பாஸ்'  வெற்றியாளர் ஆரவ் அறிவிப்பு!

எங்கள் இருவரையும் திரையில் ஜோடியாகப் பார்க்க மக்கள் விருப்பப்பட்டால் அதற்கு நான் தயார்...
ஓவியாவுடன் இணைந்து நடிக்கத் தயார்: 'பிக் பாஸ்'  வெற்றியாளர் ஆரவ் அறிவிப்பு!

கடந்த சில மாதங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பானது.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீஸனை நடிகர் ஆரவ் வென்றுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி சனிக்கிழமை அன்று நடைபெற்றது. சிநேகன், கணேஷ் வெங்கட்ராமன், ஆரவ், ஹரிஷ் ஆகிய 4 பேரும் இறுதிச்சுற்றில் போட்டியிட்டார்கள். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இதரப் போட்டியாளர்கள் இறுதிச்சுற்றில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டார்கள். 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் ஆரவ் அறிவிக்கப்பட்டார். கவிஞர் சிநேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 3-ம் இடத்தை ஹரிஷும் 4-ம் இடத்தை கணேஷ் வெங்கட்ராமனும் பெற்றார்கள். 

வெற்றி பெற்ற ஆரவ் ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையைப் பெற்றார்.

வெற்றி பெற்றது குறித்து ஆரவ் கூறியதாவது:

இந்தப் போட்டியில் நான் வெற்றிபெறுவேன் என நினைக்கவில்லை. என் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்களைச் சந்தித்துள்ளேன். எனவே இந்தப் போட்டியில் பங்கேற்க நான் ஒப்புக்கொண்ட பிறகு எனக்கு வெற்றி குறித்த எவ்வித நம்பிக்கையும் இல்லை. எந்தத் திட்டமும் வைத்துக்கொண்டு இந்தப் போட்டியில் நான் பங்கேற்கவில்லை. நடப்பது எதுவோ அதன்படி என் செயலை வகுத்துக்கொண்டேன். நான் நானாகவே இருந்தேன். 

சென்னையில் கடந்த 8 வருடங்களாகத் தனியாக வசிக்கிறேன். ஆக தினமும் எப்படி வாழ்வேனோ அப்படித்தான் பிக் பாஸ் அரங்கிலும் இருந்தேன். என் நண்பர்கள், குடும்பம், இணையம், கைபேசி இல்லாமல் வாழ்ந்தது மட்டும்தான் வித்தியாசம். 

மக்கள் எனக்குத் தொடர்ந்து வாக்களித்ததால்தான் பிக் பாஸில் நீடித்தேன். அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்தப் போட்டி குறித்த புரிதல் ஏற்படுவதற்கு முன்பு உடைந்து போன தருணங்களும் உண்டு. போட்டியில் ஜெயிப்பதை விடவும் அதில் எனக்கான பயணம் மற்றும் மதிப்பு மீதுதான் கவனமாக இருந்தேன். 

பிக் பாஸ் போட்டியை கணேஷ் வெங்கட்ராமன் அல்லது சிநேகன் ஆகிய இருவரில் ஒருவர்தான் ஜெயிப்பார் என எண்ணினேன். அவர்கள் இருவரும் கடுமையான சவாலை அளிக்கும் போட்டியாளர்களாக இருந்தார்கள். எல்லா டாஸ்க்குகளிலும் முழுமூச்சுடன் ஈடுபட்டார்கள். என்னுடன் பிக் பாஸில் இருவரும் நீண்டநாள் பயணிப்பார்கள் என எண்ணினேன். அதுதான் நடந்தது. அவர்கள் போட்டியில் ஜெயித்திருந்தாலும் நான் சந்தோஷப்பட்டிருப்பேன். 

ஒரு நடிகராக நல்ல பெயர் வாங்கவேண்டும் என்பது என் விருப்பம். கதாநாயகனாக நடிக்க சில வாய்ப்புகள் வந்துள்ளன. எதிர்மறைக் கதாபாத்திரத்திலும் நடிக்கவும் விருப்பம். எனக்குக் கதைதான் முக்கியம். 

ஓவியாவுக்கு என் மீது விருப்பம் என எனக்குத் தெரியும். ஆனால் அவர் விளையாடுகிறார் என எண்ணினேன். தீவிரமாகக் காதலிக்கிறார் என்று தெரிந்தவுடன் இது சரி வராது என்று கூறினேன். அவரும் குழப்பம் அடைந்தார். சரியான மனநிலையிலும் இல்லை.

ஓவியாவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு வந்தால் அதை மறுக்கமாட்டேன். நாங்கள் இப்போதும் நல்ல நண்பர்கள்தான். போட்டியில் ஜெயித்ததற்காக எனக்கு வாழ்த்து சொன்னார். நான் வெற்றி பெற்றதற்காக மகிழ்ந்தார் என்றுதான் நினைக்கிறேன். எங்கள் இருவரையும் திரையில் ஜோடியாகப் பார்க்க மக்கள் விருப்பப்பட்டால் அதற்கு நான் தயார். 

போட்டியில் பங்கேற்க நான் ஒப்புக்கொண்டபோது எந்த விதிமுறைகளும் எனக்குத் தெரியாது. மற்ற மொழிகளில் வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியையும் நான் பார்த்ததில்லை. இவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நான் எண்ணிப் பார்த்ததில்லை. செல்பேசி உள்ளிட்ட கேட்ஜெட்ஸ் இல்லாத வாழ்க்கை நரகம் போல இருந்தது. நாங்கள் திரைக்கதையின்படி நடித்தோம் என்று கூறுபவர்களுக்கு - ஒருநாள், இரண்டு நாள் நடிக்கலாம்... நூறு நாள் எப்படி நடிக்கமுடியும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com