எழுத்தாளர் மீரா கதிராவன் இயக்கியுள்ள ‘விழித்திரு’ படம் நாளை வெளிவருவதாக இருந்த நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய அறிவிப்பால் சிக்கலுக்கு ஆளாகியுள்ளது.
தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிராக வரும் வெள்ளிக்கிழமை (அக்.6) முதல் புதுப்பட வெளியீடு இல்லை என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை வெளியாகவிருந்த விழித்திரு உள்ளிட்ட பல படங்களுக்குப் புதிய தடை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் வழக்கம்போல் இயங்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். இதனால் நாளை புதுப்படங்கள் வெளியாவது குறித்த குழப்பம் நீடிக்கிறது.
இந்நிலையில் இதுபோன்ற நிகழ்வுகளால் விழித்திரு இயக்குநர் மீரா கதிரவன் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளார். தன்னுடைய ஃபேஸ்புக்கில் இந்த விவகாரம் குறித்து அவர் கூறியதாவது:
திடீரென அறிவித்த ஸ்டிரைக் காரணமாக உருவாகும் பொருளாதார நஷ்டத்தைப்பற்றி பேச தயாரிப்பாளர் சங்க கூட்டத்திற்கு வந்திருக்கிறேன்... படத்தின் வியாபாரம் தொடர்பான பிரச்சினையின் பொருட்டு இங்கு வருவது இதோடு சேர்த்து எத்தனையாவது முறை என்று நினவில்லை.
படம் இயக்குவதற்கான வாய்ப்புகள் தேடி கூட இத்தனை முறை அலைந்ததில்லை. சினிமாவில் கூட்டாகச் சேர்ந்து இயங்குவது தான் பலம் ...அது தான் ஆகப்பெரிய பலவீனமும். அறமற்ற சில மனிதர்களுடன் பழகுவதாலும் பணிபுரிவதாலும் மனம் மிகவும் களைப்படைகிறது. யாரோ ஆடுகிற சூதாட்டத்திற்கு யாரையோ பணயம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.