நடிகர் ஜெய்யை 2 நாளில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பிரபல தமிழ் திரைப்பட நடிகரான ஜெய், சென்னை அடையாறு இந்திரா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜெய் புதன்கிழமை இரவு தியாகராய நகர் பகுதியில் நடைபெற்ற மது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். பின்னர் அங்கிருந்து வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஆடி காரில், தனது நண்பரான நடிகர் பிரேம்ஜியுடன் அடையாறு இந்திரா நகர் வீட்டுக்குச் சென்றார். அப்போது ஜெய், மதுபோதையில் காரை ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
அடையாறு மேம்பாலத்தில் இருந்து கார் இறங்கியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது. இதில் காரில் இருந்த இருவரும் லேசான காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். மேலும், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதாக போலீஸார், ஜெய் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்குப் பின்னர் அவரை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகை நடிகர் ஜெய்யுக்கும் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகாததால், சைதாப்பேட்டை நீதிமன்றம் அவருக்குப் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
ஆனால் நீதிமன்றத்தில் இன்றும் ஜெய் ஆஜராகாததால், அவரை 2 நாளில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.