ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2 படம் நாளை மூன்று மொழிகளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ளது.
பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). ரூ. 1500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
ஏப்ரல் 28 அன்று வெளியான பாகுபலி 2, இந்தியாவில் மட்டும் 9,000 திரையரங்குகளில் வெளியானது. இந்தியத் திரையுலகில் வேறெந்தப் படமும் இத்தகைய சாதனையைச் செய்ததில்லை. வெளியான அனைத்து மொழிகளிலும் பல கோடி வசூலை அள்ளியது.
இந்நிலையில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் பதிப்புகளின் பாகுபலி 2 படங்கள் நாளை மூன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ளன.
முதலில் சோனி மேக்ஸ் தொலைக்காட்சியில் மதியம் 1 மணிக்கு பாகுபலி 2 படத்தின் ஹிந்திப் பதிப்பு ஒளிபரப்பாகிறது. அதற்கு முன்பு அதே தொலைக்காட்சியில் காலை 11 மணிக்கு பாகுபலி 1 ஒளிபரப்பாகிறது. அது முடிந்தவுடன் அதன் தொடர்ச்சியாக பாகுபலி 2 ஒளிபரப்பாகிறது.
தெலுங்கில் பாகுபலி 2 படம், நாளை மாலை 5 மணிக்கு ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் மதியம் 3 மணிக்கு பாகுபலி 2 ஒளிபரப்பாகிறது.
இதனால், ஒரே நாளில் மூன்று மொழிகளில் மூன்று தொலைக்காட்சிகளில் பாகுபலி 2 படம் ஒளிபரப்பாகவுள்ளது. பாகுபலி 2 படத்தின் மலையாளப் பதிப்பு, ஆகஸ்ட் 27 அன்று ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஏற்கெனவே ஒளிபரப்பாகிவிட்டது.