கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீஸன் 1 ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கமலின் அதிரடி அரசியல் பேச்சுக்களும், சொல்லாடல்களும், பங்கேற்பாளர்களிடம் அவர் விவாதம் புரிந்த விதமும் அனைவரையும் கவர்ந்தது.
நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்து க்ராண்ட் ஃபினாலேவில் ஆரவ் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அது குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, இந்த நிகழ்ச்சியின் 2-வது சீசனை தொகுத்து வழங்கப்போகும் பிரபலம் யார், நிகழ்ச்சியில் அடுத்து யார் பங்கேற்க உள்ளார்கள் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
நடிகர் சூர்யா பிக் பாஸ் 2-வை வழங்கலாம் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே முதலில் இருந்தது. தற்போது இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் அரவிந்த்சாமிடம் பேசி வருகிறார்களாம் சானல் தரப்பினர். ஆனால் அரவிந்த்சாமியிடமிருந்து இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.
நடிகை ரம்பா, பவர் ஸ்டார் சீனிவாசன், சரவணன் மீனாட்சி புகழ் ரஷிதா, திவ்யதர்ஷினி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்குபெறவிருக்கிறார்கள் என்றும் இந்நிகழ்ச்சியின் பங்குபெறுபவர்களின் முழுமையான பட்டியல் விரைவில் முடிவாகும் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.
பிக் பாஸ் சீஸன் 2-வை யார் தொகுத்து வழங்கினாலும், யார் பங்குபெற்றாலும் பார்த்து ரசித்து வோட்டுக்களைப் போட தயாராகவே இருக்கிறார்கள் இந்நிகழ்ச்சியின் ரசிக பெருமக்கள்.