கார்த்திக் மற்றும் அவரது மகன் கௌதம் கார்த்திக் ஆகியோர் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கவுள்ளனர்.
தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கிய 'திரு' இப்படத்தை இயக்கவுள்ளார்.
இத்திரைப்படத்தில் அப்பா மகனாகவே இவர்கள் தோன்றவிருக்கிறார்கள். கிரியேட்டிவ் என்டர்டெயினர் பட நிறுவனம் சார்பில் ஜி. தனஞ்செயன் இப்படத்தை தயாரிக்கிறார். நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இதில், நடிகைகளாக ரஜீனா கஸன்ட்ரா, வரலட்சுமி, காமெடி நடிகர் சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு வெளியிடுவது தொடர்பான அறிவிப்பு ஒன்றை இத்திரைப்படத்தின் இயக்குநர் திரு ஞாயிற்றுக்கிழமை மாலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.
அதன்படி 'மிஸ்டர் சந்திரமௌலி' என்று இப்படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டது. இந்த தலைப்பை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக் நடித்து 1986-ல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் மௌனராகம். அதில் வரும் ஒரு காட்சியில் தனது காதலியான ரேவதியின் தந்தையை 'மிஸ்டர் சந்திரமௌலி' என்று கார்த்திக் அழைப்பது மிகவும் பிரபலமானதாகும்.