வில்லனாக நடித்தவர் ஹீரோவாக மாறி நடிப்பதும், காமெடியில் கலக்கியவர்கள் ஹீரோ அவதாரம் எடுப்பது என்பதெல்லாம் தமிழ்ச் சினிமாவில் நடக்கும் இனிய விபத்துக்கள். அந்த வரிசையில் நடிகர் சந்தானம் காமெடியை ஓரம் கட்டிவிட்டு, வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் ஹீரோவானார். அதன் பின்னர் சொந்தத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கினார்.
தில்லுக்கு துட்டு போன்ற படங்களில் காமெடி ஹீரோவாக களம் இறங்கி ரசிகர்களை மகிழ்வித்த சந்தானம், ஆனந்த் பால்கி இயக்கத்தில் சர்வர் சுந்தரம் என்ற திரைப்படத்தில் நடித்தார். வைபவி சாந்தில்யா, மயில்சாமி, ராதாரவி ஆகியோர் அவருடன் நடித்தனர். இதன் படப்படிப்பு 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிந்துவிட்டது. ஆனால் தொடர்ந்து பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது படக்குழு. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் இப்பட வெளியீடு தொடர்ந்து தள்ளிக்கொண்டே செல்வதால், சந்தானத்தின் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சந்தானம் நடித்த சக்கப்போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி, ஓடி ஓடி உழைக்கணும் ஆகிய படங்களும் வரிசையாக கிடப்பில் உள்ளன.
சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களும் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. சில படங்கள் வெளி வரவில்லை. மீண்டும் காமெடியனாக நடிக்கவும் அவர் மனம் ஒப்பவில்லை. எனவே தன் அடுத்தக்கட்ட நகர்வாக திரைப்பட இயக்கத்தில் கவனம் செலுத்த போகிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.