திரையரங்குகளில் உள்ள கேண்டீனில் அதிக விலைக்கு உணவுப்பொருள்களை விற்கக்கூடாது. தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட சில கட்டளைகளைத் திரையரங்குகளுக்கு விதித்துள்ளது தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.
தமிழ் மொழிப் படங்களுக்கு 10 சதவீதமும் மற்ற மொழிப் படங்களுக்கு 20 சதவீதமும் கேளிக்கை வரி விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது கடந்த செப். 27-ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது. திரைப்படத் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரியை நீக்குவது தொடர்பாக, விஷால் உள்ளிட்ட திரைப்படத் துறையினரும் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினரும் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
'மல்டிபிளக்ஸ், ஊராட்சி, பேரூராட்சிகளில் திரையரங்குக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டண உயர்வு தொடர்பாக நாங்கள் விடுத்த கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது. ஆனால், கேளிக்கை வரியை அதிகமான பாரமாக நினைக்கிறோம். இதனை பேச்சுவார்த்தையின் போது தெரிவித்தோம். ஏற்கெனவே ஜி.எஸ்.டி. இருக்கிறது. இதையும் தாண்டி கேளிக்கை வரி விதிக்கப்பட்டால் சினிமா தொழில் பாதிக்கப்படும் என பேசியுள்ளோம். தொடர்புடைய அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பேசியுள்ளோம். முதல்வர் இந்தப் பிரச்னை மீது நாளை அல்லது நாளை மறுநாள் உரிய முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்' என்று விஷால் பதிலளித்தார்.
இந்நிலையில் திரையரங்குகளுக்குப் புதிய கட்டளைகளை விஷால் தலைமையிலான தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய விதிமுறைகள்:
* இன்று முதல் அரசு நிர்ணயித்த கட்டணம் தான் திரையரங்குகளில் வசூலிக்க வேண்டும்.
* திரையரங்குகளில் உள்ள கேண்டீனில் எம்ஆர்பி விலைக்குத்தான் விற்கவேண்டும்.
* அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்பட வேண்டும்.
* தண்ணீர் கொண்டுவர மக்களை அனுமதிக்க வேண்டும்.
* பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
* விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்.
* மீறிச் செயல்படும் திரையரங்குகள் மீது அரசிடம் உடனடியாகப் புகார் கொடுத்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
என திரையரங்குகளுக்குப் புதிய கட்டளைகள் விதிக்கப்பட்டுள்ளன.