அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் - மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர்.ரஹ்மான்.
படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படத்துக்கு இதுவரை தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்படவில்லை.
திரைப்படத்தில் விலங்குகள் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருந்தால் விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெற்று அச்சான்றிதழ் இணைத்துதான் தணிக்கைச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும்.
படத்தில் புறாக்கள் பறப்பது கிராபிக்ஸ் என்பதற்கான ஆதாரத்தை அளிக்கவில்லை. மேலும் ராஜநாகத்தின் பெயரை நாகப்பாம்பு எனப் பெயர் மாற்றித் தரப்பட்டுள்ளது. இக்காரணங்களால் அக்டோபர் 11 அன்று நடந்த துணைக்குழுக் கூட்டத்தில் மெர்சல் படத்துக்கு விலங்கு நல வாரியம் தடையில்லாச் சான்று வழங்கப்படவில்லை. இந்தச் சான்றிதழ் தந்த பிறகே தணிக்கைக் குழுவுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், படத்துக்கான முன்பதிவு தொடங்கப்பட்டது.
இந்நிலையில், "மெர்சல்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய கிரீன்வேஸ் இல்லத்தில் நடிகர் விஜய் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடன் இருந்தார்.
அப்போது, திரையரங்கு கட்டண உயர்வுக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததற்கும், கேளிக்கை வரியை 8 சதவீதமாகக் குறைத்ததற்கும் முதல்வருக்கு விஜய் நன்றி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே விலங்குகள் நலவாரிய அமைப்புக்கு மெர்சல் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. இதைப் பார்த்த விலங்குகள் நல வாரிய அமைப்பு மெர்சல் திரைப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இருப்பினும் சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.