"மெர்சல்' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய கிரீன்வேஸ் இல்லத்தில் நடிகர் விஜய் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.
நடிகர் விஜய் நடித்த "மெர்சல்' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதால், திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, நடிகர் விஜய் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடன் இருந்தார். திரையரங்கு கட்டண உயர்வுக்கு தமிழக அரசு அனுமதி அளித்ததற்கும், கேளிக்கை வரியை 8 சதவீதமாகக் குறைத்ததற்கும் முதல்வருக்கு விஜய் நன்றி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.