சென்னை; தனது அரசியல் பிரவேசம் குறித்த நோக்கத்திற்காக தவறான கருத்துகளை நடிகர் விஜய் பரப்புகிறார் என்று மெர்சல் படத்திற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனத்தின் 100-ஆவது படமாக நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் 'மெர்சல்' திரைப்படம் தீபாவளி தினமான நேற்று திரைக்கு வந்துள்ளது. பல தடைகளுக்கு பிறகு இந்த படம் திரைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடிகர் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல்கள் பற்றியும், அதற்கான மாற்றுகளைப் பற்றியும் இந்த திரைப்படம் பேசியுள்ளது. இதில் மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி பற்றியும், பிரதமர் மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' திட்ட செயல்பாடுகளைப் பற்றியும் விமர்சித்து கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் மெர்சல் படத்திற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:
மெர்சல் படத்தில் இந்தியாவின் புதிய வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி பற்றியும், பிரதமர் மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' திட்ட செயல்பாடுகளைப் பற்றியும் விமர்சித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். தனது அரசியல் பிரவேசம் குறித்த நோக்கத்திற்காக தவறான கருத்துகளைப் நடிகர் விஜய் பரப்புகிறார்.
இவ்வாறு தமிழிசை தெரிவித்துள்ளார்.