உலகில் முதல் பெண்கள் படைப் பிரிவு மற்றும் தற்கொலை படைப் பிரிவையும் உருவாக்கிய வீரப் பெண்மணி வேலு நாச்சியார். சிவகங்கை சீமையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிய பிறகு தலைமறைவாக இருந்து படை திரட்டி அவர்களை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை பிடித்த மங்கை. சிவகங்கையின் அரசியான வேலு நாச்சியார் வெள்ளித் திரையை ஆட்சி செய்யப் போகிறாள். ஸ்ரீராம் ஷர்மாவின் இயக்கத்தில் வேலு நாச்சியார் படம் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படத்துக்காக இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார்.
வேலு நாச்சியார் வாழ்க்கையை சொல்லும் நாட்டிய நாடகத்தை ஸ்ரீராம் சர்மா என்பவர் நடத்தி வருகிறார். இவர் திருவள்ளுவரின் உருவப் படத்தை வரைந்த பிரபல ஓவியர் வேணுகோபால் ஷர்மாவின் மகன் ஆவார். சமீபத்தில் வேலு நாச்சியார் நாட்டிய நாடகம் சென்னையில் நடை பெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய வைகோ, இந்த நாடகம் விரைவில் சினிமாவாகும், அதை நான் தயாரிக்கிறேன் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக இளையராஜாவை சந்தித்து இப்படத்தைப் பற்றி கூறவும், தமிழக வீர மங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கைப் படத்துக்கு இசையமைக்க ராஜா இசைந்தார். ஆனால் இளையராஜா தரப்பிலிருந்து இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வமான தகவல் வெளிவரவில்லை.
இதற்காக 'கண்ணகி பிலிம்ஸ்' என்கிற பெயரில் புதிய சினிமா தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளார் வைகோ. இதன் பொருட்டு சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரில் சென்று, அந்தச் சங்கத்தில் ஒரு அங்கத்தினராக தன்னை பதிவு செய்து கொண்டிருக்கிறார் வைகோ.
இப்படத்துக்கான திரைக்கதையை வைகோ எழுதுகிறார். அது குறித்து அவர் கூறும் போது, ‘வேலுநாச்சியார் திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு, அதை கண்ணகி பிலிம்ஸ் மூலம் தயாரிப்பதில் பெருமைபடுகிறேன். இந்த நாடகத்தை இயக்கிய ஸ்ரீராம் சர்மாவே இந்த படத்தையும் இயக்குகிறார்’என்றார் வைகோ.