விஜய் நடிப்பில் மெர்சல் திரைப்படம் வெளிவந்து பலவிதமான விமரிசனங்களை சந்தித்து வருகிறது. அவற்றை மிகப் பொறுமையாக எதிர்கொண்டு வருகின்றனர் படக் குழுவினர். ஜிஎஸ்டி பற்றி தவறான கருத்துக்களை விஜய் சொல்லி இருக்கிறார் என்று பிஜேபி குரல் எழுப்பிக் கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் ஹெச். ராஜா நடிகர் விஜயை ஜோசப் விஜய் என்று ட்வீட் செய்துள்ளார்.
மேலும் மெர்சல் படத் தயாரிப்பாளரான ஹேமா ருக்மணியையும் கிறுத்துவர் என்று குறிப்பிட்டுப் பேசியுள்ளார். மேலும் அவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டியில் மெர்சல் படம் பார்த்தீர்களா என்ற கேள்விக்கு இணையதளத்தில் பார்த்தேன் என்று கூறினார்.
இன்னொரு பக்கம் தமிழிசை செளந்திரராஜன் ஜிஎஸ்டி பற்றிய காட்சிகளை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் முன்னணி பிரபலங்கள் மெரசலுக்கு ஆதரவாக தங்கள் குரல்களை எழுப்பிவருகின்றனர்.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் தனது ட்விட்டரில் முழு கருத்து சுதந்திரமே மிக சிறந்த ஜனநாயகம், இந்தியா மிகச் சிறந்த ஜனநாயக நாடு என்பதில் பெருமை கொண்டிருக்கிறேன். We don't need recensor என்று ட்வீட் செய்துள்ளார்.
பிரபல தொகுப்பாளினி டிடி ட்விட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் பல குழந்தைகள் இறந்துள்ளனர், ஆனால் இந்த தலைவர் ஹேமா ருக்மணி கிறுத்துவரா என்பதை உறுதி செய்ய நினைக்கிறார், எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஒரே குழப்பமாக உள்ளது என்று ட்வீட் செய்துள்ளார் டிடி.