நடிகர் விஜய் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் - மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர்.ரஹ்மான்.
மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். மெர்சல் படத்தில் மருத்துவர்களை பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் முத்துகுமார் புகார் அளித்துள்ளார். வழிபாட்டுத் தலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் விஜய் பேசியுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோயில் கட்டுவதை விடவும் மருத்துவமனை கட்டுவது கிராம மக்களுக்கு மிகவும் உபயோகமானது என மெர்சல் படத்தில் விஜய் பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. அதுதான் தற்போது சிக்கலுக்கு ஆளாகியுள்ளது.