பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ‘பத்மாவதி’ இந்தித் திரைப்படம் இன்று பாலிவுட்டில் ஹாட் டாபிக். படத்தின் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவிருக்கும் நடிகர்கள் ஒவ்வொருவரின் தோற்றங்களும் தொடர்ந்து வெளியாகி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் தற்போது அத்திரைப்படத்திலிருந்து பத்மாவதியாக நடிக்கும் தீபிகா படுகோன் ராஜஸ்தானிய நாட்டுப்புற நடன சாயலில் பாடி , ஆடியுள்ள ‘கூமர்’ எனும் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப்பாடலில் தீபிகாவின் தோற்றமும் நடனமும் பலராலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில் பாலிவுட் முன்னாள் கனவுக்கன்னியும், பிரபல நடிகையுமான மாதுரி தீட்ஷித்தின் பாராட்டு மட்டும் ஸ்பெஷலாகப் பலராலும் குறிப்பிடப்படுகிறது.
பத்மாவதி திரைப்படத்தில் இடம்பெறும் ‘கூமர்’ பாடலைப் பாடியவர் பாடகி ஸ்ரேயா கோஷல்... ராஜஸ்தானி நாட்டுப்புறப் பாடல் வகையைச் சேர்ந்த இந்தப் பாடலை எழுதியவர் ஸ்வரூப் கான். இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்தவர் க்ருதி மகேஷ் மித்யா எனும் நடன இயக்குனர் என்றாலும் கூட பாடலின் இடையே வரும் கூமர் நாட்டுப்புற நடனத்திற்கான பயிற்சி மட்டும் ஜ்யோதி டி தோமர் என்பவரால் அளிக்கப்பட்டுள்ளது. இப்பாடலில் தீபிகாவின் கை தேர்ந்த நடன அசைவுகளும், முக பாவங்களும் பல ஆண்டுகளாக நாட்டுப்புற நடனப் பயிற்சி பெற்று அதிலேயே ஊறிப்போனவர்களின் திறமைக்கு சவால் விடுவதாக அமைந்தது தான் அந்நடன அமைப்பின் சிறப்பு!
ஏனெனில் மாதுரியும் சஞ்சய் லீலா பன்சாலியின் பழைய திரைப்படங்களில் இடம்பெற்ற கதாநாயகியருள் ஒருவர் என்பதோடு நடனக்காட்சிகளின் போது தன்னுடைய ஸ்பெஷலான அசைவுகளாலும், முக பாவனைகளாலும் லட்சக்கணக்கான ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர்களில் ஒருவராகவும் மாதுரி இப்போதும் நினைவு கூரப்படுகிறார் என்பதாலுமே மாதுரி கூமர் பாடலுக்கு நடனமாடியதற்காக தீபிகாவைப் பாராட்டியதை பாலிவுட் மிகப்பெரிய பாராட்டாகக் கருதுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற மராட்டியத் திரைப்பட விருது விழா ஒன்றில் மேற்கண்ட இரு நாயகிகளும் இணைந்து பங்கு பெறுகையில், மேடையில் இருவரும் ஒன்றாக இணைந்து நின்ற போது தான் இந்த நெகிழ்வான தருணம் அரங்கேறியுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தங்களது இயக்குனராக சஞ்சய் லீலா பன்சாலியின் பெருமை குறித்தும் இருவரும் சில தகவல்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
Image courtesy: google.