செப்டம்பர் 29 அன்று ஆயுத பூஜை விடுமுறை என்பதால் அன்றைய தினம் 4 படங்கள் வெளியாகவுள்ளன. முதலில் வேலைக்காரன், பலூன் படங்கள் வெளியாவதாக அறிவித்திருந்தன. தற்போது இந்தப் பட்டியலில் அறம், சர்வர் சுந்தரம் ஆகிய இரு படங்களும் இணைந்துள்ளன.
நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கி வரும் படம், அறம். இதில் நயன்தாராவுக்கு கலெக்டர் வேடம். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு, பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி, லால்குடி இளையராஜா கலை இயக்கம் என பெரிய கூட்டணி இணைந்திருக்கிறது.
"தில்லுக்கு துட்டு' படத்தையடுத்து சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் "சர்வர் சுந்தரம்'. கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வைபவி ஷந்திலியா கதாநாயகியாக நடித்துள்ளார். மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார்கள். கதை எழுதி இப்படத்தை இயக்கியவர், ஆனந்த் பால்கி. பி.கே.வர்மா ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த இரு படங்களும் செப்டம்பர் 29 அன்று வெளியாகவுள்ளதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. இதையடுத்து அன்றைய தினம் 4 தமிழ்ப் படங்கள் வெளிவரவுள்ளன.
இருநாள்களுக்கு முன்பு ஸ்பைடர் படம் வெளிவரவுள்ளது. மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பைடர் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள படத்தை என்.வி.பிரசாத் மற்றும் தாகூர் மது தயாரித்துள்ளார்கள். செப்டம்பர் 27 அன்று இந்தப் படம் வெளிவருகிறது.
செப்டம்பர் 29 - ஆயுத பூஜை. அடுத்த செப். 30, அக்டோபர் 1, 2 ஆகிய அனைத்தும் அரசு விடுமுறைத் தினங்கள். இதனால் தொடர்ந்து 4 தினங்கள் விடுமுறையாக உள்ளதால் இது வசூலுக்கு மிகவும் உதவும் என அச்சமயத்தில் பல படங்கள் வெளிவரவுள்ளன.