பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் - குரங்கு பொம்மை.
இந்நிலையில் நேற்று பல புதிய படங்கள் வெளியானதால், திரையரங்குகளில் குரங்கு பொம்மை படத்தின் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கு பாரதிராஜாவும் விதார்த்தும் வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், நடிகர் விதார்த் கூறியதாவது:
பல்வேறு சிரமங்களைக் கடந்து திரையரங்குகளில் ஒரு படத்தைத் திரையிடுகிறோம். ஆனால் திரையரங்குகள் சரியான முறையில் படத்தை ஓட்டுவதில்லை. குரங்கு பொம்மை படம் வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில், மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் நேற்று புதுப்படங்கள் வெளியானதால் குரங்கு பொம்மை படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளன என்றார்.
இயக்குநரும் இப்படத்தில் நடித்தவருமான பாரதிராஜா கூறியதாவது: இயக்குநர் நித்திலன் திறமைசாலி. ராம், வெற்றிமாறன் போல சிறந்த இயக்குநராக வருவார். குரங்கு பொம்மை படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் புதுப்படங்கள் வெளியாவதால் இந்தப் படத்தைத் திரையரங்குகளிலிருந்து தூக்குகிறார்கள். ஓடுகிற படத்தைத் தூக்குவது அநாகரிகம் என்றார்.