கேரளாவின் பிரேமம் மற்றும் ஓவியாவை தொடர்ந்து நமது தமிழ் பசங்களால் அதிகம் பேசப்பட்ட இன்னுமொரு கேரளத்து படைப்பு ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்குக் கேரள சேலையில் நடனமாடிய சில கல்லூரி மாணவிகளின் வீடியோ பதிவு.
செப்டம்பர் 5-ம் தேதி ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில் கேரளாவின் கொச்சின் பகுதியைச் சேர்ந்த சில கல்லூரி மாணவிகளும், ஆசிரியரும் மோகன் லால் நடிப்பில் வெளி வந்த ‘வெளிபாடிண்டே புஸ்தகம்’ படத்தில் இடம் பெற்றிருந்த ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு நடனம் ஆடி அதை இணையத்தில் பதிவேற்றினர். இதில் வியப்பு என்னவென்றால் கேரளாவை விடத் தமிழ் ஆண்களின் மனதில் இந்தப் பாடலும், இதில் அடிய பெண்களும் நீங்கா இடம் பிடித்துவிட்டனர். அதிலும் முக்கியமாக ஷெரில் என்கிற பெண் பல இளைஞர்களின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார்.
உண்மையில் ஷெரில் அந்தக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இந்த ஆண்டு ஓணம் திருநாளும், ஆசிரியர் தினமும் ஒன்றாக வந்ததால் மாணவர்களிடையே ஒரு நல்ல உறவை மேம்படுத்த இந்தப் பாடலுக்கு மாணவிகளுடன் இணைந்து நடனமாடியதாக ஷெரில் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் சில மலையாள படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் இவரைத் தேடி வந்துள்ளது. இதுவரை அந்தப் படங்களில் நடிப்பது பற்றி எந்தவொரு முடிவும் ஷெரில் எடுக்காத நிலையில், தமிழ்ப் படங்கள் என்றால் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், வாய்ப்பு கிடைத்தால் தமிழ்ப் படத்தில் நடிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழில் கெளதம் மேனன் இயக்கிய ‘வாரணம் ஆயிரம்’ படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், சூர்யாவிற்காகவே அந்தப் படத்தை எண்ணற்ற முறை பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.