குஜராத் மாநிலம் ஆமதாபாத்-மும்பை இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனர். ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிலான இந்த கனவுத் திட்டத்தால் ஆமதாபாத்-மும்பை ஆகிய இரு நகரங்களுக்கு இடையிலான 500 கி.மீ.க்கு மேற்பட்ட தொலைவை மூன்று மணி நேரத்துக்குள் கடந்துவிட முடியும். அதாவது இப்போதுள்ள 7 மணி நேர பயண நேரம் 3 மணி நேரத்துக்குள்ளாகக் குறையும்.
ஜப்பான் இத்திட்டத்துக்காக ரூ.88,000 கோடியை 0.1 சதவீத வட்டியில் அளித்துள்ளது. கடந்த 1964-ஆம் ஆண்டு ஜப்பானில் புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. இப்போது 15 நாடுகள் புல்லட் ரயில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன. ஐரோப்பா முதல் சீனா வரை பல நாடுகளில் புல்லட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆமதாபாத்-மும்பை இடையிலான புல்லட் ரயில் திட்டம் 2022-ஆம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இத்திட்டம் குறித்த தனது கருத்தை நடிகை கஸ்தூரி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:
ஆமதாபாத்-மும்பை இடையிலான இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் முடிவடைகிறதாம். சென்னையில் நாங்கள் 2010-லிருந்து மெட்ரோ ரயிலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். 2020-க்கு முன்பு முடிவடையுமா என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பரங்கிமலை - நேரு பூங்கா, சின்னமலை - தேனாம்பேட்டை இடையிலான வழித்தடப் பணிகள் முடிவடைந்து, சென்னை மெட்ரோ ரயிலின் முழுமையான முதல் கட்ட போக்குவரத்து வரும் 2018 மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் ராஜீவ் நாராயண் திவேதி நேற்று தெரிவித்துள்ளார்.