தமிழில் ரீமேக் ஆகிறது கலக்கல் தெலுங்குப் படம் 'அர்ஜுன் ரெட்டி’

'அர்ஜுன் ரெட்டி' இந்தத் தெலுங்குப் படம் தான் இப்போது தென்னிந்தியாவிலிருந்து சூப்பர் ஹிட்
தமிழில் ரீமேக் ஆகிறது கலக்கல் தெலுங்குப் படம் 'அர்ஜுன் ரெட்டி’

'அர்ஜுன் ரெட்டி' இந்தத் தெலுங்குப் படம் தான் இப்போது மொத்த தென்னிந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த சூப்பர் ஹிட் படம்.

இப்படத்தை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இவர் ஏழு வருடங்களுக்கு முன்னால் இயக்குனர் கிரண் குமார் இயக்கத்தில் 'கேடி' என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது முதல் படத்தை இயக்கியுள்ளார் சந்தீப். 

விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலரது நடிப்பில் அர்ஜுன் ரெட்டி படத்தை உருவாக்கினார். இத்திரைப்படம் வெளியான நாளிலிருந்து பெரும் வரவேற்பையும் பாராட்டுதல்களையும் அவருக்குப் பெற்றுத் தருகிறது. ஆரம்பத்தில் குறைந்த திரையரங்குகளில் மட்டுமே வெளியான இத்திரைப்படம், மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பால் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

விமரிசகர்கள், திரைப் பிரபலங்கள் பலரது பாராட்டுக்களையும் கவனத்தையும் பெற்றதுடன் இல்லாமல் பாக்ஸ் ஆஃபீஸிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது அர்ஜுன் ரெட்டி. அனுஷ்கா, பிரபாஸ், சமந்தா, ராஜமெளலி என பல திரைப்பிரபலங்கள் இப்படத்தைப் பார்த்து புகழ்ந்து தள்ளியிள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் படத்தைப் பற்றிய பாசிட்டிவ் விமரிசனங்கள் பகிரப்படுவதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் இயக்குனர் சந்தீப்.

டோலிவுட்டிலிருந்து இப்படியொரு அசத்தல் படமா என்று ஆச்சரியப்படுகிறார்கள் கோலிவுட் மற்றும் மாலிவுட் திரையுலகினர். இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி பட டப்பிங் உரிமையை வாங்கி ரீமேக் செய்ய தமிழ் மற்றும் மலையாள தயாரிப்பாளர்கள் பலர் முயற்சி செய்தனர். அவர்களுள், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, சூப்பர் குட் பிலிம்ஸ், ஞானவேல்ராஜா, தனுஷின் வுண்டர்பார் உள்ளிட்டோரும் இத்திரைப்பட உரிமையை வாங்க முயற்சி செய்தனர். கடும் போட்டிக்கும் இடையே E4 எண்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் டப்பிங் உரிமையை கைப்பற்றி உள்ளது.

மலையாளத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் தான் இந்த E4 எண்டர்டெயின்மண்ட் நிறுவனம். அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமை பெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் 'அர்ஜுன் ரெட்டி' படம் திரையிடுவதை நிறுத்துயுள்ளார்கள்.

தமிழ் மற்றும் மலையாள என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகர்களை வைத்து மிக விரைவில் இதன் ரீமேக்கைத் தொடங்க முடிவு செய்துள்ளது இத்தயாரிப்பு நிறுவனம்.  தமிழில் இத்திரைப்படத்தில் நடிக்க சிம்பு ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் தற்போது இயக்குனர் மணி ரத்னம் படத்தில் நடிக்கவிருப்பதால் அவரால் தேதிகள் கொடுக்க இயலாது. தமிழிலும் மலையாளத்திலும் பொருத்தமான நடிகர் தேர்வு முடிவானதும், படப்பிடிப்பு உடனே தொடங்கிவிடும் என்கிறது தயாரிப்பாளர் தரப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com