தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை மறக்க முடியாமல் செய்த நடிகை நயன்தாராவுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.
தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக 'நானும் ரவுடிதான்' என்ற படத்தில் நடித்தார் நயன்தாரா. அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இதனையடுத்து, நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன.
நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் இறுதி நாளில் பட குழுவினர் செல்பி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அப்போது விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகிய இருவரும் ஜோடியாக செல்பி எடுத்துக்கொண்டனர். அந்தப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளிவந்தன. பிறகு, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒன்றாக இருப்பது போன்ற மற்றொரு படமும் வெளியானது. கடந்த வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற சைமா விருது நிகழ்ச்சிக்காக அந்த நாட்டுக்குச் சென்ற நயன்தாரா, விமான நிலையத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து சென்றார். இந்தக் காட்சியின் வீடியோவும் படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.
நேற்று, இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள். இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக நியூயார்க் சென்றுள்ளார்கள்.
இருவரும் அவரவர் படப்பிடிப்புப் பரபரப்புகளில் இருந்து சற்று விலகி, எவ்விதத் தொந்தரவுமின்றிப் பிறந்தநாளைக் கொண்டாட நியூயார்க் சென்றுள்ளார்கள். இந்நிலையில் அங்கு இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் முதலில் வெளியானது. இதையடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடனான பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
மேலும் ட்விட்டரில் அவர் இதுகுறித்து கூறியதாவது:
இதுபோன்று ஒரு பிறந்தநாளைக் கொண்டாடுவேன் எனக் கனவிலும் நினைத்தது இல்லை. முதலில் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். என் வாழ்க்கையை மிகவும் அழகாக்கி வெளிச்சமாகியுள்ள நயன்தாராவுக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.