நடிப்பு தான் என் உயிர் மூச்சு என்று சொல்லும் நடிகர்களுக்கு மத்தியில், நடிப்பு மட்டுமே என் வாழ்க்கையில்லை என்கிறார் நடிகை அஞ்சலி பாட்டீல்.
ஹிந்தி இயக்குநர் அமித் மசூர்கர் இயக்கியுள்ள 'நியூட்டன்' திரைப்படம், இந்த வருட இந்தியப் படமாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் அஞ்சலி பாட்டீலும் நடித்துள்ளார்.
கமர்ஷியல் படங்களில் நடிக்காமல் கதை அம்சம், வித்தியாசமான கதைக்கரு கொண்ட படங்களில் மட்டும் நடிப்பது குறித்து அஞ்சலி பாட்டீல் கூறியதாவது:
நியூட்டன் படம் தேர்வானதில் மகிழ்ச்சி. எங்களுடைய உழைப்புக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நடிப்பு மட்டும் என் வாழ்க்கையில்லை என்று எனக்குப் புரிவதற்குச் சிறிது காலமானது. நடிப்பு என்பது என் வாழ்க்கையின் ஓர் அங்கம் மட்டுமே. பயணம் செய்தல், புத்தகம் வாசித்தல், சமையலில் ஆர்வமாக இருப்பது, புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்வது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது. அது ஒரு மொழியாகவும் இருக்கலாம். தற்காப்புக் கலையாகவும் இருக்கலாம் - என பலவகையான செயல்களில் ஈடுபடவே விருப்பம். .
நடிப்பது என்பது எனக்கு ஒரு வேலை. அதற்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. என்னுடைய செலவுகளைச் சமாளிக்க உதவுகிறது. சினிமா என்கிற ஊடகம் பிடித்திருப்பதால் அதில் ஈடுபடுகிறேன்.
கமர்ஷியல் படங்களில் ஏன் கதாநாயகியாக நடிப்பதில்லை என்று என்னைக் கேட்கிறார்கள். எனில் நான் ஒரு விற்பனைப் பொருளாக மாறவேண்டும். பெரிய நிறுவனங்களில் தயாரிக்கும் படங்களில் நடிக்கவேண்டும். பகட்டாக உடை உடுத்தி பார்ட்டிகளுக்குச் செல்லவேண்டும். என்னால் அதையெல்லாம் செய்யமுடியாது. எனக்குத் தேவையானதெல்லாம் நல்ல கதை, திறமையான இயக்குநர், நல்ல மனிதர்கள் என்கிறார்.
பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படத்திலும் நடித்து வருகிறார் அஞ்சலி பாட்டீல்.