விக்ரமுக்கு மறுக்கப்பட்ட தலைப்பை விஜய்க்கு தந்தது ஏன்? 'மெர்சல்' விவகாரத்தில் கேள்வி எழுப்பும் தயாரிப்பாளர்!

மெர்சல்' என்ற தலைப்பில் விஜய் படம் வெளியானால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்...
விக்ரமுக்கு மறுக்கப்பட்ட தலைப்பை விஜய்க்கு தந்தது ஏன்? 'மெர்சல்' விவகாரத்தில் கேள்வி எழுப்பும் தயாரிப்பாளர்!

நடிகர் விக்ரம் மற்றும் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் ஆகியோருக்கு மறுக்கப்பட்ட மெர்சல் படத்தலைப்பு விஜய்க்கு மட்டும் வழங்கப்பட்டது ஏன் என தயாரிப்பாளர் ராஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். மெர்சல் தலைப்பு விவகாரம் தொடர்பாக அதிகாரபூர்வக் கடிதங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவுள்ள 'மெர்சல்' திரைப்படத்தை அக்டோபர் 3 -ஆம் தேதி வரை வெளியிடவும், விளம்பரப்படுத்தவும் இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதுதொடர்பாக, ஏ.ஆர். பிலிம் பேக்டரி உரிமையாளரான வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏ.ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நான் உறுப்பினராக உள்ளேன். புதிதாக திரையிடப்படும் திரைப்படங்களின் பெயர்களை இந்தச் சங்கத்தில் பதிவு செய்வதன் மூலம் படத்துக்கான பெயர் வைப்பது தொடர்பான குழப்பங்கள் தவிர்க்கப்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தில் தலைப்புகளைப் பதிவு செய்துவிட்டால் மற்றவர்கள் அதே தலைப்பில் படம் எடுக்க இந்த சங்கம் தடை விதித்துள்ளது. 

இந்நிலையில், எனது மகன் ஆரூத்தை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி, 'மெரசலாயிட்டேன்' என்ற தலைப்பில் படத்தை தயாரித்து வெளியிட கடந்த 2014 ஆம் ஆண்டே தலைப்பையும், கதையையும் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். ஆனால், 'மெர்சல்' என்ற தலைப்பில் நடிகர் விஜய் நடிக்கும் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த 'மெர்சல்' என்ற தலைப்பு நான் பதிவு செய்துள்ள 'மெரசலாயிட்டேன்' என்ற தலைப்பை ஒத்து இருக்கிறது.  'மெரசலாயிட்டேன்' என்ற தலைப்பைப் பயன்படுத்தி அதிக பொருட்செலவில் படம் எடுக்க உள்ள நிலையில், 'மெர்சல்' என்ற தலைப்பில் விஜய் படம் வெளியானால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். இதுதொடர்பாக நான் ஏற்கெனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்மனுதாரர்கள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி விரைவில் 'மெர்சல்' என்ற பெயரிலேயே விஜய் நடிக்கும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே, தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் நிறுவனமோ அல்லது அதன் உரிமையாளரான என்.ராமசாமியோ, 'மெர்சல்' என்ற பெயரைப் பயன்படுத்தவோ அல்லது இந்தப் பெயரைப் பயன்படுத்தி படத்தை வெளியிடவோ தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவவில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த மனு, வெள்ளிக்கிழமை நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை 'மெர்சல்' என்ற பெயரில் திரைப்படத்தின் விளம்பரத்தையோ, படத்தையோ வெளியிட இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ராஜேந்திரன், இதற்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தேனாண்டாள் ஃபிலிம்ஸுக்கும் அனுப்பிய கடிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

மெர்சல் என்கிற தலைப்பை ஜுன் 20-ம் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளில், தயாரிப்பாளர் சங்கத்துக்கு இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார் ராஜேந்திரன். அதில் மெர்சல் என்கிற தலைப்பால் தன்னுடைய மெரசலாயிட்டேன் என்கிற தலைப்பு பாதிக்கப்படும் என்பதால் இந்தத் தலைப்பை விட்டுக்கொடுக்க விருப்பம் இல்லை என்கிறார்.

ஆனால் இரண்டு மாதங்களாக இதுகுறித்துத் தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் மீண்டும் கடிதம் எழுதுகிறார். அதில் அவர் கூறியதாவது: இந்தத் தலைப்புக்காக நான் சந்தா தொகையைக் கட்டிவருகிறேன். இந்தத் தலைப்பு ஜனவரி 2018 வரை எங்களிடம்தான் உள்ளது. 

மெர்சல் என்கிற தலைப்பை நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் சேம்பரில் பதிவு செய்ய முயன்றபோது சேம்பரிலிருந்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பம், தயாரிப்பாளர் சங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்தத் தலைப்பு எங்களுடைய ஏ.ஆர். பிலிம் பேக்டரிக்குத்தான் சொந்தம் என்று கூறினீர்கள். 

நடிகர் விக்ரம் இருமுகன் படத்துக்காக மெர்சல் தலைப்பைக் கேட்டபோதும் தயாரிப்பாளர் சங்கம் கொடுக்கவில்லை. 

விஜய் நடிக்கும் மெர்சல் தலைப்பைத் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யவில்லை. சவுத் இந்தியன் சேம்பரில் பதிவு செய்துள்ளார்கள். தயாரிப்பாளர் சங்கத்திடமிருந்து என்ஓசி வாங்காமல் மெர்சல் தலைப்பில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இதுகுறித்து நேரடியாக முறையிட்டும் இரண்டு மாதங்களாக எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த விவகாரத்தில் விஷால் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

இதையடுத்து ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்நிலையில், அக்டோபர் 3 ஆம் தேதி வரை 'மெர்சல்' என்ற பெயரில் திரைப்படத்தின் விளம்பரத்தையோ, படத்தையோ வெளியிட இடைக்காலத் தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com