கோவையில் 60 வயது நபர் ஒருவர் 1979-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை தான் பார்த்து ரசித்த அனைத்து படத்தின் டிக்கெட்டையும் சேகரித்து வருகிறார். 1979-லிருந்து 1989-ம் ஆண்டு வரை, பத்து வருட காலமாக அவரிடம் இருக்கும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமானதாம்.
சினிமா டிக்கெட்டுகளைச் சேர்த்து வைப்பதை வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் ஆர்வத்துடன் செய்கிறார் மூர்த்தி. இவரை அப்பகுதி மக்கள் 'சினிமா டிக்கெட் கலெக்டர்’ என்ற பட்டப்பெயரில்தான் அழைக்கிறார்கள். ‘என்னிடம் ஆயிரத்துக்கு மேற்பட்ட சினிமா டிக்கெட்டுகள் உள்ளன, அவை 50 பைசாவில் ஆரம்பித்து 150 ரூபாய் வரையில் உள்ளவை. சினிமா பார்த்த தேதி, நேரம் போன்ற விபரங்கலை அந்தந்த டிக்கெட்டின் பின்பக்கத்தில் எழுதி வைத்துவிடுவேன்’என்கிறார் மூர்த்தி.
மேலும் அவர் கூறுகையில், 'அந்தக் காலத்தில் ஜனங்கள் சினிமா பார்ப்பதற்கு என்று தனியாக பணத்தை ஒதுக்கி வைத்து படங்களைப் பார்த்து வந்தார்கள். ஆனால் தற்போதைய சூழலில் ஒரு சினிமாவை தியேட்டரில் போய் பார்ப்பது மிகவும் சிரமமாகிவிட்டது, காரணம் அந்தளவுக்கு வரி போடுகிறார்கள்’என்றார் வருத்தத்துடன்.
திரை ஆர்வலராக அவருடைய கருத்து என்னவென்றால் புதிய படங்களை விட பழைய படங்கள்தான் அவருடைய விருப்பத்துக்குரியவை. சமீபத்திய படங்கள் மூர்த்தியை கவரவில்லை. அதற்குக் காரணமாக அவர் கூறுவது, 'பழைய படங்களில் கருத்து இருந்தது. ஆனால் இப்போது வரும் படங்களில் கலாச்சார சீரழிவுகள் தான் அதிகம் உள்ளது' என்கிறார் இந்த மூத்த குடிமுகன்.