நவீன இசையில் புரோகிராமிங் மட்டும்தான் உள்ளது என்று இளையராஜா விமரிசனம் செய்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா, ஃபேஸ்புக் லைவ் வழியாக ரசிகர்களிடம் கலந்துரையாடினார். ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், இளையராஜா பேசியதாவது:
கலையில் எந்த வடிவமாக இருந்தாலும் அதைச் செயல்படுத்திக்காட்டவேண்டும். ஆனால் நவீன இசையில் செயல்பாடு இல்லை. புரோகிராமிங் மட்டும் தான் உள்ளது. அதை இசை என யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். எனவே நவீன இசையை பிளாஸ்டிக் இசை எனக் கூறலாம்.
மற்ற மொழிப் படங்களுக்கு இசையமைக்கும்போது அந்த மொழியைச் சார்ந்த மண்ணின் கலாசாரத்தை அறிந்துகொள்வது முக்கியம். மொழியை அறிந்துகொள்வதை விட மக்களின் வழக்கங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
கமல், அருமையான நடிகர். நன்றாகவும் பாடுவார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இருந்து என்ன கேட்டாலும் பதில் சொல்வார். நல்ல இசை ரசனை அவருக்கு உண்டு. அவர் என்னைத் தேர்வு செய்கிறார். அதனால் அவருடன் இணைந்து பல படங்கள் செய்கிறேன்.
ஃபேஸ்புக் லைவில் எப்போது அடுத்ததாக வருவீர்கள் எனக் கேட்கிறார்கள். இது எப்படி உள்ளது என்றால் இசையை விட்டு எப்போது வெளியே வருவீர்கள் எனக் கேட்பதுபோல உள்ளது என்று கூறினார்.