பழம்பெரும் நடிகரும் பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான டாம் ஆல்டர் காலமானார். அவருக்கு வயது 67.
தோல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அமெரிக்க வம்சாவழியைச் சேர்ந்த டாம் ஆல்டர், மும்பையில் நேற்றிரவு காலமானார். இவர், 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். தமிழக டிவி நேயர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஜுனூன் தொடரில் கேசவ் கல்சி வேடத்தில் நடித்துப் புகழ்பெற்றார். டாம் ஆல்டருக்கு கரோல் என்கிற மனைவியும் ஜாமி என்கிற மகனும் அஃப்சான் என்கிற மகளும் உள்ளார்கள்.
விளையாட்டு விமரிசகராகவும் இருந்துள்ள டாம் ஆல்டர், இந்திய அணிக்குத் தேர்வாகாத முன்பு, சச்சின் டெண்டுல்கரை முதல்முதலாக டிவி பேட்டி எடுத்தார். 2008-ம் ஆண்டு இவருக்கு மத்திய அரசின் பத்ம ஸ்ரீ விருது அளிக்கப்பட்டது.
டாம் ஆல்டரின் மறைவுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் சமூகவலைத்தளங்கள் வழியாக தங்களுடைய இரங்கலைத் தெரிவித்துள்ளார்கள்.