காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி தமிழ் திரையுலகினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ( ம் தேதி ஏப்ரல், ஞாயிற்றுக்கிழமை) அறவழியில் மெளனப் போராட்டம் நடத்தினர்.
நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நடிகர் விஜய் முதல் ஆளாக வந்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி, தமிழ்த் திரையுலகம் சார்பில் கண்டன அறவழிப் போராட்டம் இன்று நடந்தது. இதில் கோலிவுட்டை சேர்ந்த அனைவரும் பங்கேற்றனர். ஆனால் நடிகர் அஜித், பிரகாஷ் ராஜ், அதர்வா, அர்ஜுன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட சிலர் பங்கேற்கவில்லை. அதற்கான காரணம் எதுவும் அவர்கள் தெரிவித்திராத நிலையில் சமூக வலைத்தளஙகளில் நெட்டிசன்கள் அவர்களை விமரிசனம் செய்துவருகிறார்கள். அஜித்தை தவிர மற்றவர்கள் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டதால் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்றும் ரசிகர்கள் விமரிசிக்கிறார்கள்.
இந்தப் போராட்டத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால், சூர்யா, கார்த்தி, சிவகுமார், தனுஷ், விக்ரம், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, பொன்வண்ணன், பார்த்திபன் உள்ளிட்ட பல நடிகர்களும், ரேகா, தன்ஷிகா உள்ளிட்ட நடிகைகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து, மதன் கார்க்கி உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டனர். இப்போராட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறியது: ‘
மக்களை பாதிக்கும் பிரச்னை என்றால் அதற்கு அரசு தீர்வு காணவேண்டும். திரையுலகம் பிரச்சினையில் சிக்கிக் கொண்டிருக்கும் வேளையிலும், மக்களுக்காக போராடுவது முக்கியம் என கருதியதால் போராட்டம் நடத்துகிறோம். காவிரி மற்றும் ஸ்டெர்லைட்டுக்காக போராட்டம் நடத்துவது நமது கடமை’ என்று கூறினார்.