65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக 'டூலெட்' தேர்வாகியுள்ளது.
இயக்குநர் சேகர் கபூர் தலைமையிலான தேசியத் திரைப்படத் தேர்வுக் குழுவினர், செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் தேசிய விருதுகளுக்குத் தேர்வானவையின் பட்டியலை அவர்கள் அப்போது வெளியிட்டனர்.
கடந்த வருடம் தமிழ்த் திரையுலகம் ஓரளவு விருதுகளை அள்ளியது. மொத்தமாக தமிழகத்துக்கு 6 தேசிய திரைப்பட விருதுகள் கிடைத்தன. கடந்தமுறை சிறந்த தமிழ்த் திரைப்படமாக 'ஜோக்கர்' தேர்வானது. சிறந்த பாடலாசிரியாக வைரமுத்துவும், ஒளிப்பதிவாளராக திருவும் தேர்வு செய்யப்பட்டார்கள். வைரமுத்துவுக்கு 7-வது முறையாக தேசிய விருது கிடைத்தது. சிறந்த திரைப்படத் திறனாய்வாளராக தயாரிப்பாளர் தனஞ்செயன் அறிவிக்கப்பட்டார். அவர் பெற்ற இரண்டாவது தேசிய விருதாகும். சிறந்த பின்னணிப் பாடகர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தரய்யர் தேர்வு செய்யப்பட்டார். 'ஜோக்கர்' படத்தில் இடம்பெற்ற 'ஜாஸ்மின்' பாடலைப் பாடியதற்காக அவருக்கு விருது கிடைத்தது. சிறந்த கலை இயக்கத்துக்கான விருது '24' படத்துக்குக் கிடைத்தது. சுப்ரதா சக்ரவர்த்தி, ஸ்ரேயஸ் கெடேகர் மற்றும் அமித் ராய் ஆகிய மூன்று கலை இயக்குநர்கள் இவ்விருதுக்குத் தேர்வானார்கள்.
கடந்தமுறை ஆறு தேசிய விருதுகளைப் பெற்ற தமிழ்த் திரையுலகம் இந்தமுறை மூன்று விருதுகளை மட்டுமே பெற்று ஏமாற்றம் அடைந்துள்ளது.
சிறந்த தமிழ்ப் படமாக செழியன் இயக்கிய டூலெட் தேர்வாகியுள்ளது. காற்று வெளியிடை படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது ஏ.ஆர். ரஹ்மானுக்கும் காற்று வெளியிடை படத்தின் வான் வருவான் பாடலுக்காக சிறந்த பாடகிக்காக விருது சாஷா திருப்பதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான்.