தேசிய விருதுகள் குறித்து பேசியுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தெரிவித்துள்ளார்.
65-வது தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில், "காற்று வெளியிடை' படத்தின் பாடல்கள் மற்றும் "மாம்' படத்தின் பின்னணி இசை என இரண்டு தேசிய விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விருதுகள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசிய விடியோ பதிவு விவரம்:
தேசிய விருது, "காற்று வெளியிடை' படத்துக்குக் கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால், மணிரத்னம் ஓர் அற்புதமான மனிதர். அவரை "ஐடியா கடல்' என்று சொல்லலாம். அவருடன் பணியாற்றும்போது, நாம் எந்தத் திட்டம் குறித்தும் அவரிடம் கேட்கலாம். அதைப் பயன்படுத்தும் விதத்தில் அவர் கொண்டு வருவார். என்னுடைய அருமை அண்ணன், வழிகாட்டி, சிறந்த மனிதரான மணிரத்னத்துக்கு மறுபடியும் என்னுடைய நன்றி.
நடிகர் கார்த்தி, பாடலாசிரியர்கள் வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி, பாடகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர், என்னுடைய அருமையான குழு அனைவருக்கும் நன்றி. எல்லாப் புகழும் இறைவனுக்கே. "மாம்' படத்துக்கு இசையமைக்க வேண்டும் என சென்னை வந்து என்னிடம் கேட்டார் ஸ்ரீதேவி. இந்தப் படம் எனக்கு முக்கியமான படம்.
ஏனென்றால், அந்தப் படத்தில் கூறப்பட்ட விஷயம் நாட்டுக்கு மிகவும் அவசியம் எனத் தோன்றியதால் அந்தப் படத்துக்கு இசையமைத்தேன். அந்தப் படத்துக்கும் தேசிய விருது கிடைத்ததற்கு எனக்கு மிகவும் சந்தோஷம். ஸ்ரீதேவியை இழந்திருப்பதில் எனக்கு வருத்தம்.