ஜோடியைத் தேர்வு செய்ய ஆர்யா மறுப்பு: பெரிதும் ஏமாற்றமடைந்த நேயர்கள்! (விடியோ)

இத்தனை நாளாக நிகழ்ச்சியைப் பார்த்த தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகவே பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்...
ஜோடியைத் தேர்வு செய்ய ஆர்யா மறுப்பு: பெரிதும் ஏமாற்றமடைந்த நேயர்கள்! (விடியோ)

ஆர்யா,தன் வாழ்க்கைத் துணையாக வரப்போகின்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்து அவருக்கு இறுதி "டோக்கன் ஆப் லவ்" அளித்து திருமண செய்யப்போகிறார் "எங்க வீட்டு மாப்பிள்ளை" #GRAND_FINALE வில் இன்று இரவு 8:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

இப்படியொரு அறிவிப்பு ஏப்ரல் 16 அன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாகக் காண்பவர்கள் மட்டுமல்லாமல் நேயர்களும் இந்தப் போட்டியின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். ஆனால் கடைசியில் அவர்களுக்குக் கிடைத்தது, ஏமாற்றமே. 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8.30 முதல் 9.30 மணி வரைக்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. இதில் கலந்துகொண்ட 18 பெண்களில் நடிகர் ஆர்யா தனக்கு விருப்பமான பெண்ணைத் தேர்வு செய்யும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது. இதற்காக அந்தப் பெண்களுக்கு நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 

கடைசி 5 பேரில் ஸ்வேதா, அபர்ணதி, சீதாலட்சுமி, சுசானா, அகதா ஆகியோர் இடம்பெற்றார்கள். இந்நிலையில் இந்தப் பட்டியலில் இருந்து இருவரை நீக்கி இறுதிச்சுற்றில் மோதும் 3 பேரைத் தேர்வு செய்தார் ஆர்யா. 

சுசானா, அகதா, சீதாலட்சுமி ஆகிய மூவரும் இறுதிச்சுற்றில் பங்குபெறும் மூன்று போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். இந்த மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லர். கடைசி 5 பேரில் தேர்வான ஸ்வேதா, அபர்ணதி ஆகிய இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் போட்டியிலிருந்து நீக்கப்பட்டார்கள். 

இறுதிச்சுற்றுக்குத் தேர்வானவர்களில் சுசானா, கனடாவைச் சேர்ந்த இலங்கை தமிழ்ப் பெண். அகதா - பெங்களூர், சீதாலட்சுமி - கொச்சி. இந்த மூன்று பேரில் இருந்து தனக்கான ஜோடியை ஆர்யா தேர்வு செய்வார் என்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அறிவிப்பு செய்தது. இதையடுத்து இறுதிச்சுற்று நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது.

மூன்று போட்டியாளர்களில் இருந்து ஒருவரைத் தன்னால் தேர்வு செய்ய முடியாது. எனக்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படுகிறது. ஒருவரை இப்போது தேர்வு செய்தால் மற்ற இருவரும் ஏமாற்றம் அடைவார்கள். இந்த மேடையில் மற்ற இருவரையும் நிராகரித்தால் அவர்களுடைய பெற்றோர்கள் வருத்தப்படுவார்கள் என்று ஆர்யா, இறுதியாகத் தன்னுடைய முடிவை அறிவித்தார். அதாவது, இந்த நிகழ்ச்சியின் மூலமாக தனக்கான ஜோடியைத் தேர்வு செய்ய அவர் மறுத்துவிட்டார். 

அரங்கில் இருந்த திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் ஆர்யாவின் முடிவினால் ஏமாற்றம் அடைந்தார்கள். இதற்கு முந்தைய சுற்றுகளில் வெளியேறிய அபர்ணதி, தேவசூர்யா, நவீனா ஆகியோரும் இந்த இறுதிச்சுற்றைக் காண நேரில் வந்திருந்தார்கள். அப்போது, அபர்ணதி ஆர்யாவிடம், என்னை மட்டும் எப்படி நிராகரிக்க முடிந்தது, என்னை வெளியேற்றும்போது நான் வருத்தப்படுவேன் என்று ஏன் தோன்றவில்லை என்று கேள்வி எழுப்பினார். இந்த மூன்று பேரிலிருந்து ஒருவரைத் தேர்வு செய்யும்படி அரங்கில் இருந்த பலரும் ஆர்யாவுக்கு ஆலோசனை வழங்கினார்கள். ஆனால் ஆர்யா கடைசிவரை தனக்கான ஜோடியைத் தேர்வு செய்யாமலேயே இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது.

இதையடுத்து இந்த நிகழ்ச்சியையும் ஆர்யாவின் முடிவையும் விமரிசனம் செய்து சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவுகள் எழுதியுள்ளார்கள். இத்தனை நாளாக நிகழ்ச்சியைப் பார்த்த தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகவே பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

சுசானா
சுசானா
அகதா
அகதா
சீதாலட்சுமி
சீதாலட்சுமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com