கோலிவுட் வேலை நிறுத்தத்துக்குப் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள் ரிலீஸ் எப்போது?

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று புதிய படங்கள் திரைக்கு வரும்.
கோலிவுட் வேலை நிறுத்தத்துக்குப் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித் படங்கள் ரிலீஸ் எப்போது?

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று புதிய படங்கள் திரைக்கு வரும். ஆனால், இந்த புத்தாண்டு ஒரு படம் கூட வெளியாகவில்லை. காரணம் அனைவரும் அறிந்ததே. கோலிவுட் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கடந்த 48 நாட்களுக்கும் மேலாக புதிய படங்கள் திரைக்கு வராமல் திரையரங்குகள் வெறுமையாக இருந்தன.

தற்போது வேலை நிறுத்தம் முடிந்துள்ள நிலையில், திரையரங்கு பழைய பொலிவை பெறத் தொடங்கியுள்ளது. பள்ளி, கல்லூரி பரீட்சைகள் முடிந்த நிலையில் இளைஞர்கள் திரையரங்கிற்கு வருகை தரத் தொடங்கிவிட்டனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியேட்டர்களில் கூட்டத்தைப் பார்க்க முடிகிறது.

ஆனால் ஒரேடியாக அத்தனைப் படங்களும் வெளிவர வாய்ப்பில்லாத நிலையில், ஒவ்வொரு வாரமும் சில படங்களை ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளனர் திரைத்துறையினர். சென்ஸார் செய்யப்பட்ட படங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற நிலையில் கடந்த மாதம் 30 படங்கள் தணிக்கை முடிந்து ரிலீஸுக்குத் தயாராக உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, 40 நாட்களுக்கு பிறகு முதல் தமிழ்ப்படமாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'மெர்குரி' வெளியானது .சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா', கமல்ஹாசன் நடித்துள்ள 'விஸ்வரூபம்-2' படங்களும் திரைக்கு வரத் தயாராக இருக்கின்றன. இந்த படங்கள் தணிக்கை முடிந்து ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளன. 'காலா' வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விஸ்வரூபம் 2 ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். 

அஜித் நடிக்கும் விசுவாசம் படப்பிடிப்பு, அஜித் பிறந்த நாள் முடிந்தபின், வரும் மே 4- ம் தேதியில் தொடங்கவிருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் ஆரம்பமானது. தீபாவளி அன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை இயக்குகிறார் சிவா. அஜித். விசுவாசம் படமும் வெற்றியடைந்தால் ஐந்தாவது முறையாக அஜித் - சிவா இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

விஜயின் 62-வது திரைப்பட முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவருகிறது. துப்பாக்கி, கத்தி ஆகிய மிகப் பெரிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் விஜய் இணைகிறார்கள். இப்படத்துக்கு அனிருத் ரவிசந்தர் இசையமைக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பரில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த ஆண்டு தீபாவளியன்று திரைக்கு வரும் என படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். கோலிவுட் ஸ்ட்ரைக் சமயத்திலும் அதன் படபிடிப்பு நடந்தது. ஆனால் கடுமையான விமரிசனம் எழுந்ததால் அது கைவிடப்பட்டது. இதனால் 'விஜய்-62' ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது ஷூட்டிங் தொடங்கவிருப்பதால், இப்படம் தீபாவளியன்று திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்தனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com