கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் தனி கவனம் பெறுகின்றன. கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அறம் மற்றும் அதிதி பாலன் நடிப்பில் வெளியான அருவி திரைப்படமும் இதற்கு உதாரணம். இவர்களைத் தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா நாயகி மையத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கும் அந்தப் படத்தின் பெயர் ‘கா’. இப்படத்தின் பூஜை அண்மையில் சென்னையில் நடைப்பெற்றது. இதில் இடம்பெறும் சம்பவங்கள் முழுவதும் காட்டில் நிகழ்வதாக கதை உருவாக்கப் பட்டுள்ளதால் டைட்டிலை கா என்று பெயர் வைத்துள்ளனர். இலக்கியத் தமிழில் கா என்றால் காடு என்று அர்த்தம். இப்படத்தில் வைல்ட் லைஃப் போட்டோகிராபராக ஆண்ட்ரியா நடிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் நாஞ்சில். கிரைம் திரில்லர் ஜானரில் இப்படமாக உருவாகவுள்ளது.
பொட்டு படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வரும் ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் கா படத்தை தயாரிக்கிறார்கள். மே மாதம் பொட்டு படம் வெளியானதும் கா படப்பிடிப்பு அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் நடக்கும். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் இளவரசு நடிக்கிறார். பிற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்துக்கு இசை அம்ரிஷ், ஒளிப்பதிவு அறிவழகன், எடிட்டிங் கோபிகிருஷ்ணா.
ஆண்ட்ரியாவின் இந்த போஸ்டரும், பேஸ்புக் பதிவும் ரசிகர்களிடையே படத்திற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.