எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகும் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் இணையும் என்ஜிகே படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்கள். இந்தப் படம் தீபாவளியன்று வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதேபோல ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் படமும் தீபாவளியன்று வெளிவருவதால் இவ்விரு படங்களின் மோதலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.
இந்நிலையில் திடீரென என்ஜிகே படப்பிடிப்பு சமீபத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. இயக்குநர் செல்வராகவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து என்ஜிகே படம் தீபாவளிக்கு வெளியாகாது என்று தகவல்கள் வெளியாகின. கிறிஸ்துமஸ் அல்லது பொங்கல் சமயத்தில் படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
தன்னுடைய உடல்நிலை குறித்த செய்திகளுக்கு செல்வராகவன் விளக்கம் அளித்தார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: நண்பர்களே, இது ஒரு சிறு மருத்துவப் பரிசோதனை நடைமுறைதான். நான் நலமாக உள்ளேன். என் வேலையை மீண்டும் தொடங்கியுள்ளேன். என்ஜிகே படப்பிடிப்பு சில நாள்களில் மீண்டும் தொடங்கும். என் மீது அக்கறை செலுத்தியவர்களுக்கு நன்றி என்று கூறினார்.
இந்நிலையில் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதையடுத்து படவெளியீடு குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ட்விட்டரில் கூறியதாவது:
என்ஜிகே படம் குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளீர்கள். தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். (படப்பிடிப்புப் பணிகளில்) திட்டமிட்டப்படி இல்லாமல், சற்று பின்தங்கியுள்ளோம். அதைச் சரிசெய்ய வேகமாகப் பணியாற்றி வருகிறோம். ஒருவாரத்தில் நிலவரம் குறித்து மீண்டும் தகவல் அளிக்கிறேன். இதற்கிடையே ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ள வேண்டாம். அதற்கு எவ்வித மதிப்பும் இல்லை. அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.