கமல் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வரும் விக்ரம், அடுத்ததாக ரூ. 300 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகவுள்ள மஹாவீர் கர்ணா என்கிற படத்தை ஆர்.எஸ். விமல் இயக்குகிறார். ‘என்னு நிண்டே மொய்தீன்’ என்ற மலையாளப் படத்தை அவர் இயக்கியுள்ளார். யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்துக்கான சிறப்பு பூஜை, திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் நடைபெற்றது. இந்த பூஜையில் இயக்குநர் விமல், நடிகர் சுரேஷ் கோபி போன்றோர் கலந்துகொண்டார்கள். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 2020-ல் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ள எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய இணையத்தளத்தில் கூறியுள்ளதாவது:
மகாவீர் கர்ணா என்று இப்போதைக்குப் பெயரிடப்பட்டிருக்கும் தமிழ் –தெலுங்கு –இந்தி படத்தின் முதல் நிகழ்ச்சி. விக்ரம் கதாநாயகனாக நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்போதைக்கு பெரிய நடிகர்களில் ஒருவர் பீமனாக நடிக்கும் -ஹாலிவுட் நடிகர்.
படத்திற்காக ஏறத்தாழ முப்பதடி உயரத்தில் ஒரு தேர் செட் அமைக்கப்படுகிறது. அதிலுள்ள நூறு மணிகளில் ஒரு மணியை திருவனந்தபுரம் பத்மநாபசாமி ஆலயத்தில் பூசை செய்து தச்சர்களிடம் கொடுக்கும் நிகழ்ச்சி.
2 ஆம்தேதி மாலை விமானத்தில் திருவனந்தபுரம் வந்தேன். மறுநாள், 3 ஆம் தேதி காலை விழா. சுரேஷ்கோபி, மலையாள திரை எழுத்தாளர் சங்கத்தலைவர் பி.உண்ணிக்கிருஷ்ணன் ஆகியோர் பங்கெடுத்தனர்.
கர்ணன் நான் திரைக்கதை உதவியும் வசனமும் எழுதும் படம். புராணப்பின்னணியில் எடுக்கப்படுவது. எந்நு நின்றே மொய்தீன் என்னும் பெரும் வெற்றிப் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இயக்குகிறார். லண்டனைச் சேர்ந்த யுனைடெட் ஃபிலிம் கிங்டம் தயாரிக்கிறது. ஷாருக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவனமும் கூட்டாக சேர பேச்சு நடக்கிறது.
இப்போதைய பட்ஜெட் 250 கோடி ரூபாய். செட்டுக்கு மட்டுமே 80 கோடி. 80 கோடிவரை வரைகலைக்காக. ஹைதராபாத் ராமோஜிராவ் நிறுவனத்தில் அப்பணிகள் நடைபெறுகின்றன.
கர்ணனின் திரைக்கதை 2016ல் திட்டமிடப்பட்டு 2017ல் எழுதி முடிக்கப்பட்டுவிட்டது. படத்தில் என் பணி இனி அனேகமாக ஏதுமில்லை.அதன் மாபெரும் பட்ஜெட் மற்றும் நடிகர்குழு காரணமாக தாமதமாகியது. மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்கக்கூடும். இன்னொரு பெரிய படம் என்று எழுதியுள்ளார்.