இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்கள் வரை தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசு மற்றும் அரசின் இலவசத் திட்டங்களை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி, தேவராஜன் என்பவர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இந்த நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி, ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன், சர்கார் பட விவகாரம் தொடர்பாக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் அரசின் கொள்கை முடிவுகளை விமர்சிக்க மாட்டேன் என உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கோரினார். அரசுத் தரப்பின் கோரிக்கையை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்க மறுத்து விட்டார்.
இந்த நிலையில், முருகதாஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முருகதாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முருகதாஸ் சார்பில் வழக்குரைஞர் ஆர்.விவேகானந்தனும், அரசு தரப்பில் வழக்குரைஞர் முகமது ரியாஷும் ஆஜராகினர். இந்த வழக்கில் அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஆஜராக உள்ளதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணையை டிசம்பர் 14-க்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. திரைப்படங்களில் அரசின் கொள்கை முடிவுகளை விமரிசிக்கக் கூடாதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து, ஏ.ஆர். முருகதாஸ் மீதான எஃப்.ஐ.ஆர். மீது 6 வாரங்களுக்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று கூறியதுடன் வழக்கு விசாரணைக்கு 6 வாரங்கள் வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.