நடிகர் ரகுவரன் 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கேரளாவில் பிறந்தார். பி.ஏ. பட்டதாரியான இவர் 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய கூட்டுப்புழுக்கள் எனும் நாவலை இயக்குநர் ஆர்.சி.சக்தி படமாக்கியிருந்தார். அதில் முதன்மை பாத்திரமான அரவிந்தன் எனும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர் ரகுவரன். மிக இயல்பாக அப்படத்தில் நடித்திருப்பார். அதன் பின்னர் தொடர்ந்து கை நாட்டு, மைக்கேல் ராஜ் உள்ளிட்ட பலத் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். சம்சாரம் அது மின்சாரம், அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.
ஆனாலும் எதிர் நாயகன் வேடங்களில் நடித்தபின்னர் தான் ரகுவரனின் நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ரகுவரன் நடித்த பாட்ஷா இன்றளவும் கொண்டாடப்படும் படங்களுள் ஒன்றாகும். இருவரும் இணைந்து மிஸ்டர் பாரத், ஷிவா, மதிதன், அருணாசலம், முத்து என பல திரைப்படங்களில் நடித்துள்ளனர். ரஜினியின் நல்ல நண்பராக ரகுவரன் இருந்தார். தனுஷுடன் நடித்த படமான யாரடி நீ மோகினி ரகுவரனின் கடைசிப் படமாக அனைவரின் நினைவில் உள்ளது. ஆனால் அவர் கடைசியாக நடித்து வெளியான படத்தின் பெயர் 'சில நேரங்களில்'. உடல் நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் நடிகர் ரகுவரன் மார்ச் 19, 2008-ல் காலமானார்.
ரகுவரனைப் பற்றி பலருக்கும் தெரியாத செய்தி அவருடைய இசை ஆர்வம். ரகுவரன் இசையமைத்து பாடியிருந்த பாடல்களை ஒரு தொகுப்பாக 'ரகுவரன் எ ம்யூசிக் ஜர்னி' என்ற தலைப்பில் அண்மையில் ஒரு இசை நிறுவனம் தயாரித்துள்ளது. அதன் குறுந்தகடை நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி 31-ம் தேதி அவரது இல்லத்தில் வெளியிட்டார். ரகுவரனின் மனைவி ரோஹினியும் மகன் ரிஷியும் அதனைப் பெற்றுக் கொண்டனர்.