காதல் கணவர் விராட் கோலியின் சதத்தை இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளம் வழியாகக் கொண்டாடியுள்ளார் நடிகை அனுஷ்கா சர்மா.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டர்பன் நகரில் பகலிரவாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3, யுவேந்திர சாஹல் 2, புவனேஷ்வர், பும்ரா தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.
அடுத்து ஆடிய இந்தியா 45.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய தரப்பில் கோலி-ரஹானே ஜோடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. கோலி-ரஹானே ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்தது. ரஹானே 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 79 ரன்களில் வெளியேறினார். கோலியும் 119 பந்துகளில் 10 பவுண்டரிகள் உள்பட 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இது கோலியின் 33-வது ஒருநாள் சதம். இலக்கை விரட்டும்போது எடுத்த 20-வது சதம். வெளிநாடுகளில் அவருடைய 19-வது சதம். கேப்டனாக இருந்து எடுத்துள்ள 11-வது சதம். தென் ஆப்பிரிக்காவில் இது அவருடைய முதல் சதம். விராட் கோலி 9 நாடுகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை விளையாடியுள்ளார். இந்த ஒன்பதிலும் அவர் சதமெடுத்துள்ளார்.
இந்நிலையில் கோலியின் சதத்தையும் அவருடைய சாதனைகளையும் காதல் மனைவி அனுஷ்கா சர்மா இன்ஸ்டகிராம் வழியாகக் கொண்டாடியுள்ளார். தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வாட் எ கைய் என்று எழுதியும், ஆர்ட்டின் படங்களையும் வெளியிட்டும் கோலிக்கு இன்ஸ்டகிராம் வழியாகத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.