தமிழரும் பிரபல இயக்குநருமான பால்கி இயக்கத்தில் உருவான 'பேட்மேன்' (PadMan) என்கிற ஹிந்திப் படம் இன்று வெளியாகியுள்ளது. அக்ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் குறைந்த விலையில் எப்படி சானிடரி நாப்கின் தயாரித்தார் என்பது பற்றிய உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. நடிகை டிவிங்கிள் கண்ணா இப்படத்தின் தயாரிப்பாளர்.
இந்நிலையில் தமிழர் ஒருவரின் கதையைப் படமாக்க ஹிந்தித் திரையுலகம் ஆர்வம் செலுத்தும்போது தமிழ்த் திரையுலகம் அதுபோன்று முயற்சி செய்யாதது ஏன் என்கிற விமரிசனங்கள் தற்போது எழுந்துள்ளன. ஆனால் பால்கிக்கு முன்பே தமிழ் இயக்குநர்கள் முருகானந்தத்தை அணுகியுள்ளார்கள். எனினும், தன்னுடைய கதை ஒரு பகுதிக்கு மட்டுமல்லாமல் பரந்துபட்டு சொல்லப்படவேண்டும் என்பது முருகானந்தத்தின் விருப்பமாக இருந்திருக்கிறது. ஆகவே பேட்மேன்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் முருகானந்தம் கூறியுள்ளதாவது:
பெண்கள் குறித்த இந்தப் பிரச்னையை பேசிய முதல் திரைப்படம் இது. பாலிவுட் படம் என்பதால் அதற்குரிய மசாலாக்கள் படத்தில் உள்ளன. கடந்த மூன்று வருடங்களாகப் படக்குழுவினரிடம் இணைந்து பணியாற்றியுள்ளேன். என்னுடைய பணிகள் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்கள் குறித்த ஆலோசனைகளுக்காக. எனக்கு ஹிந்தி தெரியாவிட்டாலும் பால்கி, ஸ்ரீராம் ஆகியோர் தமிழர்களாக இருந்ததால் என்னால் சுலபமாக உரையாடமுடிந்தது.
இந்தப் படத்தின் கதை மத்தியப் பிரதேசத்தில் நடைபெறுகிறது. இது ஹிந்திப் படமாக எடுக்கப்பட்டால்தான் இந்திய அளவில் இந்தக் கதையை விரிவாகக் கொண்டுசெல்லமுடியும். என் கதையைப் படமாக்க தமிழ் சினிமா இயக்குநர்கள் சிலர் முயற்சி செய்தார்கள். நாட்டின் ஒரு பகுதிக்கு மட்டும் என் கதையைக் கட்டுப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. 2015-ல் டிவிங்கிள் கண்ணா என்னை வந்து சந்தித்தார் என்று கூறியுள்ளார்.