பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய படம் நாச்சியார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைதுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாலா 'பி ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்துக்காக தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய பாடலொன்றை ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார்.
முன்னதாக, நாச்சியார் படத்தின் டீஸரை இணையத்தில் சூர்யா வெளியிட்டார். டீஸரின் முடிவில் ஜோதிகா பேசியுள்ள வசைச் சொல்லால் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு இயக்கங்கள் தங்களுடைய கண்டனத்தையும் பதிவு செய்தன. இது தொடர்பாகப் பேசிய ஜோதிகா, 'அந்த டீஸரைப் பற்றி இப்போது பேச வேண்டாம். படம் பார்த்தால் அனைத்துமே முடிவுக்கு வந்துவிடும். அதைப் பற்றி இப்போது பேச விரும்பவில்லை...' என்று தெரிவித்தார்.
தற்போது நாச்சியார் படம் பிப்ரவரி 16-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் கதை வெளிவந்துவிட்டது. இளம் காதல் ஜோடியின் வாழ்க்கையில் நடந்த விபரீத சம்பவமும், அதனை தொடர்ந்து அந்தப் பெண் கர்ப்பமாவதும், குற்ற சம்பவத்தை புலன் விசாரணை செய்யும் ஒரு பெண் போலீஸ் அதிகாரியையும் மையப்படுத்தி மிகவும் வித்யாசமான களனில் இப்படம் உள்ளது என்கிறது கோலிவுட் வட்டாரம். 100 நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய இப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.