பாலிவுட்டில் ஜூலி என்ற படத்தின் அறிமுகத்துக்குப் பிறகு ராய் லஷ்மி நீயா இரண்டாம் பாகத்தில் நடிக்க கோலிவுட்டுக்குத் திரும்பியுள்ளார். இந்தப் படத்தில் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். ராய் லஷ்மியைத் தவிர வரலட்சுமி, காதரீன் தெரஸா ஆகியோரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
படம் குறித்து ராய் லஷ்மி அண்மையில் ஆங்கில நாளிதழில் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியது, ‘கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெற்றிகரமான ஓடிய நீயா படத்திலிருந்து இந்த நீயா 2 முற்றிலும் மாறுபட்டது’ இரண்டுமே நாகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டவை என்பதைத் தவிர வேறு எவ்வித ஒற்றுமையும் நீங்கள் பார்க்க முடியாது’என்கிறார் ராய் லஷ்மி.
மேலும் அவர் கூறுகையில் ‘ஃபேண்டஸ்சி, த்ரில்லர், ரொமான்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய படம் நீயா 2. இந்தப் படத்தில் நான் மூன்று வகையான தோற்றங்களில் வருவேன், அதில் ஒன்றுதான் நாகினி’.கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் என நான் உட்பட மூன்று கதாநாயகிகளும் ஒவ்வொரு காலகட்டத்தில் சேர்ந்தவர்களாக இப்படத்தில் நடித்துள்ளோம். என்னுடைய கதாபாத்திரம் மட்டும் மற்ற இருவருடன் சேர்ந்து மூன்று காலகட்டத்திலும் வரும்’என்றார் ராய் லஷ்மி.
இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் தற்போது நடித்து வரும் லஷ்மி, தன் வசம் ஐந்து புதிய படங்கள் உள்ளதாகத் தெரிவித்தார். நீயா 2 படப்பிடிப்பு முடிந்ததும் பாலிவுட்டில் தன் இரண்டாவது படத்தில் நடிக்கவிருக்கிறார். அதன்பின் ஒரு மலையாளப்படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கிறார். மம்முட்டியுடன் ஆறாவது முறை ஜோடியாக நடிக்கவிருப்பதாகக் கூறினார் ராய் லஷ்மி.