ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’ என்ற பெயரில் அதே பெயருடைய ஒரு கள்வனின் உண்மைக் கதையொன்றை திரைப்படமாக்கி வருகின்றனர். பாபி மற்றும் சஞ்சய் இப்படத்தின் திரைக்கதையை எழுத, 'மும்பை போலீஸ்’ புகழ் ரோஷன் ஆண்ட்ரூஸ் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்கிறார். முதலில் அமலா பால் நடிக்கவிருந்த இப்படத்தில் தற்போது பிரியா ஆனந்த் நடிக்கிறார். இப்படத்தில் சரத் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடத்தில் மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மோகன்லால் நடிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத்தும், ஒளிப்பதிவை பினோத் பிரதானும் இசையமைப்பை கோபி சுந்தரும் இப்படத்துக்கு மேற்கொள்கின்றனர். இந்தப் படத்தை மலையாளம் மற்றும் தமிழில் இயக்கி வருகிறார் ரோஷன். இந்தப் படத்தில் நடிப்பதற்காக நிவின் பாலி சிறப்பு பயிற்சியாக களறி கற்றுக் கொண்டார்.
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பை இப்போதே உருவாக்கியிருக்கும் காயம்குளம் கொச்சுண்ணியின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படப்பிடிப்பில் மோகன்லாலும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தச் செய்தியை நிவின் பாலி தனது ட்விட்டரில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார்.