நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சியை துவங்க இருக்கிறார். தற்போது அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 'வரும் 21-ம் தேதி எனது அரசியல் பயணத்தை ராமேசுவரத்தில் இருந்து தொடங்குகிறேன். அன்றைய தினமே கட்சியின் பெயர் அறிவிக்கப்படும். பின்னர் அன்று மாலை மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் நான் பேச உள்ளேன். சினிமாவிலிருந்து விலகுகிறேன் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த தகவலில் உண்மை இல்லை. சினிமாவில் இருந்து ஒதுங்குவது குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் சமீபத்தில் கூறியிருந்தார் கமல்ஹாசன்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது புத்தக வெளியீட்டு விழாவுக்கு நடிகர் கமல்ஹா சனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ‘அமைப்பாய் திரள்வோம்’ என்ற அந்தப் புத்தகம் திருமாவளவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக வெளி வரவுள்ளது. இந்தப் புத்தகத்தை வெளியிட நடிகர் கமல் ஹாசனுக்கு தம் கட்சியின் சார்பில் திருமாவளவன் அழைத்துள்ளார். இந்த அழைப்பினை ஏற்று புத்தக வெளியீட்டு நிகழ்வில் கமல் பங்கேற்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.