சென்னை: நாச்சியார் படத்தில் இந்துக்களின் மனதினை புண்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய வசனம் ஒன்றினைப் பேசியதாக நடிகை ஜோதிகா மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குநர் பாலா இயக்கத்தில், ஜோதிகா நடிப்பில் வெள்ளியன்று வெளியாகி இருக்கும் படம் ‘நாச்சியார்’. இப்படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியான பொழுதே, அதில் ஜோதிகா பேசும் வசனம் ஒன்று கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்துக்களின் மனதினை புண்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய வசனம் ஒன்றினைப் பேசியதாக நடிகை ஜோதிகா மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியின் பிரசார அணித் தலைவரான காளிகுமார் என்பவர் அளித்துள்ள அப்புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாலா இயக்கியுள்ள நாச்சியார் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நடிகை ஜோதிகா ஒரு காட்சியில் பேசும் வசனத்தில், 'கோவிலாக இருந்தாலும், குப்பை மேடாக இருந்தாலும் எங்களுக்கு ஒன்றுதான்' என்று கூறுகிறார்.
இந்த வசனம் இந்து ஆலயங்களை அவமதிக்கும் விதத்திலும், இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது.
இதுபோன்ற சர்ச்சைக்குரிய வசனத்தை உடனடியாக நீக்க வேண்டும். நாச்சியார் படத்தை தடை செய்ய வேண்டும். இயக்குநர் பாலா மீதும், நடிகை ஜோதிகா மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.