பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘வாணி ராணி’ உள்பட பல சின்னத்திரை தொடர்களிலும், சிங்கம் 2 உள்ளிட்ட சில தமிழ் சினிமாவிலும் நடித்தவர் நடிகர் கோவை தேசிங்கு ராஜா (43). கோவையில் உள்ள பல்லடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
தனது நண்பர்களுடன் இரண்டு நாட்களுக்கு முன்னால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்றுள்ளார் தேசிங்கு ராஜா. சரங்குத்தி என்ற இடத்தில் அவர்கள் தங்கினர். அதன் பின் கோவிலுக்கு அருகில் நடந்து கொண்டிருந்த போது, தேசிங்கு ராஜாவுக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
மருத்துவமனைக்கு கொண்டு வழியிலேயே அவர் மரணமடைந்தார். கோவை கொண்டு வரப்பட்ட அவரது உடல், பல்லடத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கோவை தேசிங்கின் மரணம் சீரியல் ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் அவருடைய சக் நடிகர், நடிகையர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.