'ஒரு ஆதார் லவ்' எனும் மலையாள திரைப்படத்தில் இருக்கும் பாடல் வரிகள், முஸ்லிம் மதத்தினரின் உணர்வுகளை புன்படுத்துவது போல் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட புகாரை அடுத்து, அந்த படத்தின் இயக்குநருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விரைவில் திரைக்கு வரவுள்ள அந்தப் படத்தில் கதாநாயகி பிரியா பிரகாஷ் வாரியர் தனது கண்களால் செய்யும் குறும்பு காட்சிகள் தொடர்பான விடியோக்கள் சமூக இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதனால் அப்படத்துக்கு புதிய விளம்பரம் கிடைத்துள்ள நிலையில், புதிய சர்ச்சை ஒன்று தற்போது உருவாகியுள்ளது.
படத்தில் இருக்கும் 'மன்கியா மலரயா பூவி' எனும் பாடல் வரிகள், முஸ்லிம் மக்களின் மத உணர்வுகளை காயப்படுத்துவது போல் இருப்பதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஹைதராபாதில் உள்ள பலக்நுமா காவல்நிலையத்தில் தொழிலதிர் ஜாகிர் அலி கான், மாணவர் முகில் கான் உள்ளிட்டோரால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், 'ஒரு ஆதார் லவ்' படத்திலுள்ள பாடலின் வரிகள், முகமது நபிகளின் மனைவி குறித்து ஆட்சேபிக்கும் வகையில் எழுதப்பட்டு இருக்கிறது; இது முஸ்லிம் மத உணர்வுகளை காயப்படுத்துவது போல் இருக்கிறது. இந்த சர்ச்சைக்குரிய பாடலை நீக்க வேண்டும் அல்லது பாடல் வரிகளில் திருத்தம் செய்ய வேண்டும். பாடலை எழுதிய இயக்குநர் ஒமர் லூலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த படத்தின் இயக்குநரும், சர்ச்சைக்குரிய பாடலை எழுதியவருமான ஒமர் லூலுவுக்கு எதிராக இந்திய தண்டனையியல் சட்டத்தின் 295ஏ (மத உணர்வுகளை காயப்படுத்துதல்) பிரிவின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு ஆதார் லவ் படக்குழுவினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, கருத்து சுதந்தரத்துக்கு எதிரானதாக உள்ளது. எனவே அந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று நடிகை பிரியா வாரியரும் இயக்குநர் ஓமர் லூலுவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.