கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்ரியின் வாழ்க்கைச் சித்திரமான ‘மகாநதி’ யில் சாவித்ரியாக நடித்து வருவது அனைவரும் அறிந்த செய்தி. 2018 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவரவிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகு மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தைப் பற்றிப் பேசுகையில் நடிகை கீர்த்தி சுரேஷ், ‘இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக நான், என் மனம் கவர்ந்த நடிகையும், நடிப்புலகில் ஒரு மகாநதி எனப் புகழப்பட்டவருமான நடிகை சாவித்ரியின் மகளை நேரில் சந்தித்து சந்தித்துப் பேச வேண்டியிருந்தது. அப்போது தான் சாவித்ரியின் இயல்பான மேனரிஸங்களை எல்லாம் என்னால் கற்றுக் கொள்ள முடியும் என நினைத்தேன். அப்படி அவரது மகளைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது தான் எனக்கே தெரிந்தது எனக்கும், சாவித்ரிக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் இருப்பது!
ரியல் சாவித்ரி போன்ற ரீல் சாவித்ரியான எனக்கும் நீச்சல், கார் ஓட்டுவது, கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பது எனப் பல ஒற்றுமைகள் இருக்கின்றன என்பதை புரிந்து கொண்டேன்.
படப்பிடிப்பின் போது இயக்குனர் சொல்லிக் கொடுத்தவாறு 90 % நடித்தாலே போதும் அவர் ஓக்கே என்று அக்காட்சியை அங்கீகரித்து விடுவார். ஆனால், சாவித்ரி கதையைப் பொறுத்தவரை எனக்கு 90 % போதாது என நானே கருதத் தொடங்கி அவரைப் போலவே 100 % சாவித்ரியாக மாறி நான் நடித்திருக்கிறேன். ஏனெனில் என்னை சாவித்ரியாகத் திரையில் காணும் ரசிகர்களுக்கு கீர்த்தி சுரேஷ் தெரியக்கூடாது. சாவித்ரியைப் பார்ப்பது போலவே அவர்கள் உணர வேண்டும். எனவே நான் இத்திரைப்படத்தில் எனது 100% உழைப்பைக் கொட்டி நடித்திருக்கிறேன். என்கிறார் கீர்த்தி!