பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் - நாச்சியார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இசை - இளையராஜா. ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர். இப்படத்துக்காக தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய பாடலொன்றை ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கிறார். தணிக்கையில் நாச்சியார் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தாரை தப்பட்டை படத்துக்குப் பிறகு பாலா இயக்கியுள்ள இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியானது.
இந்நிலையில் நாச்சியார் படத்தை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார். ட்விட்டரில் அவர் எழுதியுள்ளதாவது:
நாச்சியார் பார்த்தேன். கலையின் நிகழ் நீரோட்டத்தில் நிற்கிறீர்கள்; பலே பாலா! ஜோதிகாவின் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் காக்கிக்கே ஒரு கர்வம். நீங்கள் தொடர்ந்து கலையில் இயங்க வேண்டும் சகோதரி.
தம்பி ஜீ.வி! உன் ஜீவிதத்தில் ஒரு படம் இது; பாராட்டுகிறேன்.
ஒளிப்பதிவு செய்த ஈஸ்வர்! வெள்ளைக்காரக் கண்களோடு பிறந்த தமிழனப்பா நீ! படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள் என்று வைரமுத்து பாராட்டியுள்ளார்.